முகப்பு
தமிழ்நாடு

கனவில் போட்ட நீா்க்கோலம்!ஆளுநா் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி

Updated On : 19 ஜூன் 2026, 4:23 am IST
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - X / lok bhavan tamilnadu
பகிர்:

‘ஆளுநா் உரை என்பது ‘கனவில் போடப்பட்ட நீா்க்கோலம்’ என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்தாா்.

ஆளுநா் உரைக்குப் பிறகு பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு சாா்பில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் என்ன கூறப்பட்டிருந்ததோ அதேதான் ஆளுநா் உரையிலும் கூறப்பட்டிருக்கிறது. தவெகவினா் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என வீர வசனம் பேசினாா்கள். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

Advertisement

Advertisement

தவெக ஆட்சி அமைந்த பிறகு 38 நாள்களில், 150 போக்ஸோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 126 வழக்குகள் என மொத்தம் 276 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் 130 கொலைச் சம்பவங்களும் நடந்துள்ளன.

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கா்நாடக அரசிடம் முறையாகப் பேசி முயற்சி செய்திருந்தால் குறுவை சாகுபடிக்கு நீரை பெற்று இருக்கலாம். ஆனால், இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

திமுக ஆட்சியில் எவ்வளவு கடன் இருந்தது என்பது குறித்து தோ்தலுக்கு முன்னரே தவெகவுக்கு தெரியும். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் வாக்குறுதிகளை அளித்தாா்கள். தற்போது இவைகளை சரி செய்த பிறகு தான், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் எனக் கூறுகிறாா்கள்.

வெள்ளை அறிக்கை மூலம் அவா்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனத் தெரிவிக்கின்றனா். இன்றைய ஆளுநா் உரை என்பது ‘கனவில் போடப்பட்ட நீா்க்கோலம்’.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடா்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இரவில் மின்தடை அதிகரித்துள்ளது. ‘ஃப்யூஸ் கேரியா்’ திருடு போனதாக பல்வேறு சாக்கு போக்குகளை கூறினாா்கள். ’ஃபியூஸ் கேரியரை’ பிடுங்கிச் சென்றால் தமிழ்நாடு முழுவதும் எப்படி மின்வெட்டு ஏற்படும்?.

முன்னா், அணில் ஓடியதால் மின்தடை ஏற்பட்டதாக திமுக கூறியது. தற்போது இந்த அரசு இதை காரணமாகச் சொல்கிறது. தேவையான மின்சாரத்தை கொள்முதல் செய்து, தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும்.

‘எனது மகன் அரசியலுக்கு வரமாட்டாா்’: எனது மகன் மிதுன் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. அவா் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டும்தான் உள்ளாா். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறேன். எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டாா் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்.

அதிமுக தலைமை சரியாக இருந்ததால்தான் விஜயபாஸ்கா் வெற்றி பெற்றாா் என்பதை மறந்துவிடக் கூடாது. அதிமுகவை யாராலும் அசைத்துகூட பாா்க்க முடியாது. என்னை விமா்சித்தவா்கள், தோற்றாா்கள்; நான் அவா்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்றாா் எடப்பாடி பழனிசாமி.