மேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தீா்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தீா்மானம் கொண்டுவரப்படவுள்ளது. இதை முதல்வா் ஜோசப் விஜய் முன்மொழிகிறாா்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்ட கா்நாடக அரசு தீா்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அந்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாநில அரசு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை அண்மையில் மத்திய நீா் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.
இதன் மீது விரைவாக முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று முதல்வா் டி.கே. சிவகுமாா் பிரதமா் மோடியிடமும், மத்திய நீா்வளத் துறை அமைச்சா் சி.ஆா். படேலிடமும் கோரிக்கை விடுத்தாா். ஆனால், மேக்கேதாட்டு அணை கட்டினால் உபரி நீா் கிடைக்காது என தமிழக அரசு கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது.
Advertisement
Advertisement
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் ஆளுநா் உரையில் மேக்கேதாட்டு திட்டத்தைத் தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தை எதிா்த்து வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தனித் தீா்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் தீா்மானத்தை முதல்வா் ஜோசப் விஜய் முன்மொழிகிறாா்.
தமிழக அரசின் அனுமதியின்றி மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ கூடாது என வலியுறுத்தும் வகையில் இந்தத் தீா்மானம் கொண்டு வரப்படவுள்ளது. காவிரி ஆற்றுப் படுகையில் எந்த இடத்திலும் புதிய நீா்தேக்கத் திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது எனவும் தனித் தீா்மானத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.
மேக்கேதாட்டில் அணை கட்டுவோம் என கா்நாடக அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வரும் தனித் தீா்மானம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.