FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்

தமிழகம் முழுவதும் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது

Updated On : 26 ஜூன் 2026, 5:58 am IST
பகிர்:

தமிழகம் முழுவதும் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடா் அரசுப் பள்ளியில் முதல்வா் ஜோசப் விஜய் இந்த முகாமைத் தொடங்கி வைக்கிறாா்.

இந்தியாவில் போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இரு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதன் பயனாக போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததால், கடந்த 6 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நிகழாண்டில் வரும் 28-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

குழந்தைகளுக்கு அண்மையில் சொட்டு மருந்து வழங்கியிருந்தாலும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் தவறாமல் மீண்டும் போலியோ மருந்து வழங்க வேண்டும் என சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். காய்ச்சல், சளி பாதிப்புகள் இருந்தாலும் சொட்டு மருந்து வழங்கலாம் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments