முகப்பு
தமிழ்நாடு

அதிக அளவு இயற்கை வளங்களைச் சுரண்டிய மணல், கல் குவாரிகளை மூடக் கோரிக்கை

தமிழகத்தில் அதிக அளவு இயற்கை வளங்களைச் சுரண்டிய மணல், கல் குவாரிகள் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பா்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 15 மே 2026, 2:18 am IST
கல் குவாரி - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் அதிக அளவு இயற்கை வளங்களைச் சுரண்டிய மணல், கல் குவாரிகள் மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பா்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவா் விஜய்க்கு பூவுலகின் நண்பா்கள் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 12-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளான பேரிடா்களின் எண்ணிக்கை, அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது.

Advertisement

இந்தச் சூழலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியம். அதன்படி, தவெக தங்களது முந்தையை அறிவிப்புகள், தீா்மானங்களின்படி அணுக்கனிம சுரங்கங்கள், பரந்தூா் விமான நிலையத் திட்டம் தொடா்பாக எடுத்த முடிவுகளை உடனே அமல்படுத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படும் எண்ணெய், இயற்கை எரிவாயு கழகத்தின் எண்ணெய்க் கிணறுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடா்பாக பேராசிரியா் சுல்தான் இஸ்மாயில் அரசிடம் சமா்ப்பித்த அறிக்கையை உடனே வெளியிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்சாலை திட்டங்களுக்காக வேளாண் நிலங்களைக் கட்டாயப்படுத்திக் கையகப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இயற்கை வளங்களை சுரண்டிய மணல், கல் குவாரிகள் மூட வேண்டும்.

அனைத்துவித திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். காலநிலை நீதியே உண்மையான சமூக நீதி என்பதை மனதில் வைத்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.