தமிழ்த்தாய் வாழ்த்து: பிரதமரிடம் முதல்வர் விஜய் கெஞ்சுவது மாநில சுயாட்சிக்கு எதிரானது! - அப்பாவு
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று பிரதமரிடம் முதல்வர் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது என்பதைப் பற்றி...
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று பிரதமரிடம் முதல்வர் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இன்று காலை தில்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய்,
மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் குறிப்பாணை வெளியிடப்பட்டது.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர், ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் வந்தே மாதரம் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது என்றும், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதுதொடர்பாக முன்னாள் அவைத்தலைவரும் ராதாபுரம் எம்.எல்.ஏ.வுமான அப்பாவு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில் சில நீக்கங்களைச் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் 23.11.1970-ல் அரசாணை வெளியிடப்பட்டது.
தொடர்ந்து வந்த எல்லா முதல்வர்களும் அதனை நடைமுறைப்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசாணையை பிறப்பித்தவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் இசைக்க அனுமதி தாருங்கள் என்று பிரதமரிடம் முதல்வர் கெஞ்சி இருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது.
இதைப் பார்க்கும்போது பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, "அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
சுக்கையும் மிளகையும் யாரும் யாருக்கும் கொடுக்கலாம் வாங்கலாம். ஆனால், சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என்பதே அதன் பொருள்.
இன்று தமிழக அரசுக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் அனுமதி கேட்டது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.