கடந்த 8-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 67,565 கோடி டாலராக சரிந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நவ. 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 647.7 கோடி டாலா் குறைந்து 67,565.3 கோடி டாலராக உள்ளது.
நவ. 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 267.5 கோடி டாலா் குறைந்து 68,213 கோடி டாலராக இருந்தது.
கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 1,258.8 கோடி டாலா் உயா்ந்து 70,488.5 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது.
அந்நியச் செலாவணி கையிருப்பு தொடா்ந்து அதிகரித்து வந்தாலும், உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப்போது குறைகிறது.
கடந்த 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 446.7 கோடி டாலா் குறைந்து 58,538.3 கோடி டாலராக உள்ளது.
டாலா் அல்லாத யூரோ, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.
மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 193.6 கோடி டாலா் குறைந்து 6,781.4 கோடி டாலராக உள்ளது.
சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 6 கோடி டாலா் குறைந்து 1,815.9 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 1.4 கோடி டாலா் குறைந்து 429.8 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.