FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நேர்முக்கியத் தேர்வு

அத்தியாயம் 24 - கருத்தின் மீது கருத்து வேண்டும்!

நேர்முகத் தேர்வு என்று வைத்துவிட்டு, நேராக மட்டும் கேள்விகள் கேட்காமல், கூட்டத்துடன் உட்காரவைத்துப் பேசவிடுவது என்ன நியாயம் என்றுதான் நினைக்கத் தோன்றும்.

Updated On : 3 ஆகஸ்ட் 2015, 12:04 pm IST
பகிர்:

நேர்முகத் தேர்வு என்று வைத்துவிட்டு, நேராக மட்டும் கேள்விகள் கேட்காமல், கூட்டத்துடன் உட்கார வைத்துப் பேசவிடுவது என்ன நியாயம் என்றுதான் நினைக்கத் தோன்றும்.

ஆனால், கூட்டத்துடன் உட்காரவைத்து, ஒரு தலைப்புக் கொடுத்து, குழுவாகப் பேசுங்கள் என்று சொல்லும் போதுதான், தனியாக பதில் சொன்னவரின் உண்மையான சொரூபம் தெரியும்.

மேலும், அந்தக் கூட்டத்தில், கொஞ்சம் விஷயமுள்ளவர் யார் என்றும்  தெரிந்துவிடும். மொழி வளத்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தபோது, தலைப்பையே கவனிக்காமல் விட்டால் மொத்தமும் சொதப்பிவிடும் என்று பார்த்தோம்.

Advertisement

Advertisement

FILMS ARE CORRUPTING OUR YOUTH க்கும்

FILMS ARE CORRECTING OUR YOUTH க்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிறது. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாத நம்ம ஆள் ஒருவர்,  திரைப்படங்கள் இளைஞர்களைச் சீரழிக்கின்றன என்பதற்குப் பதிலாக, திரைப்படங்கள் இளைஞர்களைச் சீராக்குகின்றன என்று பேசியிருக்கிறார்.

அதாவது நான் இந்தக் கருத்தை ஆமோதிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன் என்று சொல்லலாம். அதன்படி பார்த்தால்,

நான் இந்தக் கருத்தை ஆமோதிக்கிறேன். இன்றைய திரைப்படங்கள் பார்த்து தன்னம்பிக்கையுடன் பல இளைஞர்கள் வாழ்வில் வெற்றியடைந்திருக்கிறார்கள். பல இளைஞர்கள் காதல் தோல்வியில் இருந்து வெளிவந்திருக்கிறார்கள். மேலும் பல இளைஞர்கள், அதே போல் படம் எடுக்க வேண்டும் என்று திரைபப்டத்துறையில் நுழைந்திருக்கிறார்கள். ஆகவே இந்தக் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் என்று பேசுகிறார்.

இதற்கும் Films Corrupting our Youth க்கும் என்ன சம்பந்தம் என்று தேர்வாளர் குழம்பிவிடுவார்.

நம் ஆள் மீண்டும் ஆரம்பிக்கிறார். ஆனால், இந்தக் கருத்தில் சிலவற்றை நான் ஒத்துக்கொள்ள முடியாது. நிறைய திரைப்படங்கள் இப்போது ஆபாசமாகத்தான் வெளிவருகின்றன. அவை எப்படி இளைஞனை correct செய்யும் என்று பேசுகிறார்.

ஏற்கனவே தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் தேர்வாளருக்கு மயக்கமே வந்துவிடும்.

உண்மையில் இவர் தலைப்பை ஆதரிக்கிறாரா? இல்லையா? அப்படியெனில் ஏன் முரண்பட்டுப் பேசுகிறார் என்று திக்கித்துப்போய், அந்த நபரிடம் போய்க் கேட்கிறார்.

நீங்கள் தலைப்பை நன்றாகப் புரிந்துகொண்டீர்களா?

ஓ. நன்கு புரிந்துகொண்டேன்.

அதன்படி திரைப்படங்கள் நன்மைக்கா? தீமைக்கா

நன்மைக்குத்தான்!! இதிலென்ன சந்தேகம்?

எங்கே நீங்கள் புரிந்துகொண்ட தலைப்பை இன்னொரு முறை சொல்லுங்கள்?

FILMS ARE CORRECTING OUR YOUTH !!

 சுத்தம் !! தம்பி ! நான் சொன்னது FILMS ARE CORRUPTING OUR YOUTH..!  கொஞ்சம் கவனமா தலைப்பை கேளுங்க ! அப்புறமா வேலை கேளுங்க !

என்று சொல்லி அவரை அனுப்பிவிடுவார்கள்.

முதலில், மொழி வளம் என்பது முக்கியம். ஆங்கிலம் பேச தடுமாறுதல் மட்டுமின்றி, அடுத்தவர்கள் பேசுவதை முழுமையாக கவனிக்காமல் தலைப்பையே தவறாகப் புரிந்துகொள்வதுதான் இங்கு சோகமான தருணம்!

இந்த இடத்தில் நாம் இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆங்கிலம் அவ்வளவு முக்கியமா? ஏன், தமிழிலேயே குழு விவாதம் நடத்தினால் ஆகாதா என்ன? இது ஒரு வாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இப்போது இருக்கும் சர்வதேச தொழில் முறை மாற்றங்களில், எல்லா நாட்டினரும் கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. மேலும் , நம் ஆட்கள் குழு விவாதத்தில், உண்மையில் நல்ல தமிழில் பேசுவார்களா என்று கேட்டால்,அதற்கும் இல்லை என்றுதான் பதில் சொல்லப்போகிறோம். ஆங்கிலம் பேசும்போது இயல்பாகவே வேறு மொழி கலக்க முடியாது. ஆனால், தமிழில் பேசும்போது நம் விழிப்புணர்வு இல்லாமல் ஆங்கிலம் கலந்துவிடும். கலப்படமற்ற மொழிவளம்தான் எல்லா இடத்திலும் பயனளிக்கும் என்றுதான் ஆங்கிலத்தில் பேசச் சொல்கிறார்கள். அது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை.

'சித்திரமும் கைப்பழக்கம் ! செந்தமிழும் நாப்பழக்கம்!’ என்ற பழமொழிப்படி,

பேசிப் பழகினால், செந்தமிழ் மட்டுமல்ல செவ்வாங்கிலமும் நாப்பழக்கமாகும் என்பதுதான் நிதர்சனம்!

உண்மையில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற, கொஞ்சமாவது மொழிவளம் தேவை! அது இருந்தால், நாம் நினைத்த கருத்தை தவறில்லாமல் பேசலாம். அதையும் விட்டுவிட்டுத் தடுமாறினால், மிகவும் கஷ்டம்!

ஆக, மொழிவளம் இல்லை! அதை FLUENCY இல்லை என்று சொல்லுவார்கள். ஆனால், சொல்ல வந்த கருத்தில் அழுத்தமும் , ஆழமும் இருந்தால், நிறுவனம் நம்மேல், கொஞ்சம் சிறப்புக் கவனம் செலுத்தத் துவங்கும். அதுவும் இல்லையென்றால்…? ஒன்றும் செய்ய இயலாது.

அப்படியானால், கருத்தின் மீதான நமது கவனம் மிகவும் முக்கியமாகிறது. என்ன கருத்து? சொல்ல வந்த விஷயத்தின் மீதான நமது பரந்துபட்ட அறிவு! அதன் இரண்டு பக்கங்களுக்கான தர்க்க நியாயங்கள் ஆகியவற்றை மிகவும் யதார்த்தமாக, சுலபமாகப் பேசுபவர்கள் , அலசிப்பார்ப்பவர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடுகிறார்கள். அவர்களை நிறுவனம் அள்ளிக்கொள்ளும் சாத்தியம் அதிகம்.!

கருத்துச் செறிவை வளர்த்துக்கொள்ள, பாடத்தைத் தவிர மிகவும் முக்கியமாக, பிற நூல்கள் , நாளிதழ்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றை வாசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பது வேறு!

ஒரு குழு விவாதத்தை ஆரம்பிக்கும்போதே, தலைப்புக் கொடுத்தபின், முதலில் அதனைத் துவக்கும் நபர், அனேகமாக நிறைய வாசிப்பவராக இருப்பார். அவருக்கு முதல் வார்த்தையாக எதனைச் சொல்வது என்ற கவனம் இருக்கும்.

நிறைய குழு விவாதங்களில் நல்ல மொழிவளம் இருந்தும், தலைப்புக்கான கருத்து பற்றி பெரிய சிந்தனை இல்லாததால், அமைதியாக அமர்ந்துகொண்டிருக்கும் நபர்களைப் பார்த்திருக்கிறேன். ஆக, என்னதான் மொழி வளம் இருந்தாலும், கருத்தின் மீதும் கொஞ்சம் கவனம் தேவை!

கருத்துச் செறிவு வளர என்னவெல்லாம் செய்யவேண்டும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments