FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 865

தாது மா மலர்..

Updated On : 27 ஜூன் 2018, 12:00 am IST
பகிர்:

பதச் சேதம்

சொற் பொருள்

தாது மா மலர்முடியாலே பதறாத நூபுர அடியாலே கர தாளமாகியநொடியாலே மடிபிடியாலே

Advertisement

Advertisement

 

தாது: மகரந்தம்; மாமலர்: நல்ல மலர்கள்; முடியாலே: கூந்தலாலே; நூபுர(ம்): சிலம்பு;

சாடை பேசியவகையாலே மிகு வாடை பூசியநகையாலே பல தாறுமாறு  சொல்மிகையாலே அ(ன்)னநடையாலே

 

வாடை பூசிய: வாசனை திரவியங்களைப் பூசிய; நகையாலே: சிரிப்பாலே; மிகையாலே: செருக்காலே; அன நடையாலே: அன்னம்போன்ற நடையாலே;

மோதி மீறியமுலையாலே முலை மீதில் 
ஏறியகலையாலே வெகு மோடி நாணய(ம்)விலையாலே 
மயல்தரு(ம்) மானார்

 

கலையாலே: ஆடையாலே; மோடி: செருக்கு; நாணய விலையாலே: பணமாகப் பெறுகின்ற விலை; மானார்: பெண்கள்;

மோக வாரிதி தனிலேநாள் தொறு(ம்)மூழ்குவேன் 
உனதுஅடியார் ஆகிய மோனஞானிகளுடனேசேரவும்  அருள்வாயே

 

வாரிதி: கடல்; மோன: மௌன;

காதலாய் அருள்புரிவாய் நான் மறை மூலமே 
என உடனே மாகரி காண நேர் வருதிருமால் 
நாரணன்மருகோனே

 

நான்மறை மூலமே: நான்கு வேதங்களின் மூலப் பொருளே; மாகரி: (கஜேந்திரனாகிய) பெரிய யானை;

காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார்
தமதிடமே வாழ் சிவ காம நாயகி தரு
பாலா புலிசையில் வாழ்வே

 

புலிசையில்: புலியூரில்—சிதம்பரத்தில்;

வேத நூல் முறைவழுவாமே தினம் வேள்வியால் எழில்புனை மூவாயிரம் மேன்மை வேதியர்மிகவே பூசனைபுரிகோவே

 

 

வீறு சேர் வரை அரசாய்மேவிய மேரு 
மால்வரை என நீள் கோபுர மேலை வாயிலின்மயில் மீது ஏறியபெருமாளே.

 

வீறுசேர்: பொலிவு நிறைந்த; வரை அரசாய்: மேரு மலையாய்;

தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே... மகரந்தம் நிறைந்த மலர்களைச் சூடிய கூந்தலாலும்; சிலம்பணிந்து பதறாமல் நடக்கும் பாதத்தாலும்; கையால் இடுகின்ற தாளத்தாலும்; (வந்தாரை) மடியைப் பிடித்து வசப்படுத்தும் தன்மையாலும்;

சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல தாறுமாறு சொல் மிகையாலே அ(ன்)ன நடையாலே... ஜாடையாகப் பேசுகின்ற தன்மையாலும்; மிகுந்த வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு சிரிக்கின்ற சிரிப்பாலும்; தாறுமாறாகப் பேசுகின்ற பல பேச்சுகளின் திமிராலும்; அன்னம் போன்ற நடையாலும்;

மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே வெகு மோடி நாணய(ம்) விலையாலே மயல் தரு(ம்) மானார்... மோதித் திமிர்ந்தெழுகின்ற மார்பாலும்; மார்பின் மீது படிந்திருக்கின்ற ஆடையாலும்; மயக்குகின்ற திறத்தை காசுக்காக வெளிக்காட்டும் செருக்காலும் மையலை ஊட்டுகின்ற மாதர்களுடைய,

மோக வாரிதி தனிலே நாள் தொறு(ம்) மூழ்குவேன் உனது அடியார் ஆகிய மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே... மோகக் கடலில் எப்போதும் மூழ்குகின்ற நான் உன்னுடைய அடியார்களாகிய மௌன ஞானிகளோடு சேர்ந்து கலந்திருப்பதற்கு அருள்புரிய வேண்டும்.

காதலாய் அருள் புரிவாய் நான் மறை மூலமே என உடனே மா கரி காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே... ‘நான்கு வேதங்களுக்கும் மூலப் பொருளே! என்மீது அன்பு வைத்து அருளவேண்டும்’ என்று (கஜேந்திரானாகிய) யானை அழைத்ததும், அதனைக் காணுவதற்காக அதன் முன்னே நேரில் வந்தவரானா திருமால் நாராயணனுடைய மருமகனே!

காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவகாம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே... அன்பும் பெருந்தவமும் உடையவர்கள் வலம்வந்து வணங்கிச் சூழ்கின்ற கனகசபையின் நாதரான சிவபெருமானுடைய இடதுபாகத்தில் உள்ள சிவகாம சுந்தரி ஈன்ற பிள்ளையே! புலிசை எனப்படும் சிதம்பரத்தின் செல்வமே!

வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...வேதங்களிலே சொல்லப்பட்டுள்ள முறைப்படி தினந்தோறும் வேள்விகளைச் செய்கின்ற தில்லை மூவாயிரவர்களான மேன்மை பொருந்திய வேதியர்கள் பெரிதும் பூஜிக்கின்ற தலைவனே!

வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே.... பொலிவு தங்கிய மலையரசனான மேரு மலையைப் போல உயர்ந்திருக்கின்ற கோபுரத்தின் மேற்கு வாயிலில் மயில் மீது அமர்ந்த கோலத்தில் விளங்குகின்ற பெருமாளே!

சுருக்க உரை

நால்வேதங்களுக்கும் மூலப் பொருளே, என்மீது அன்புகொண்டு அருளவேண்டும்’ என்று கஜேந்திரன் அழைத்தவுடனே நேரில் வந்து உதவிய திருமால், நாராயணனுடைய மருமகனே! பக்தியும் பெருந்தவமும் உடைய பெரியோர்கள் வலம்வந்து சூழ்கின்ற கனகசபையின் நாதரான நடராசருடைய இடப்பாகத்திலே உறையும் உமையம்மை ஈன்ற மகவே! புலியூரான சிதம்பரத்தில் வீற்றிருப்பவனே!  வேதங்களில் விதித்திருக்கிற முறை தவறாமல் தினந்தோறும் யாகங்களை வளர்க்கும் ஒழுக்கத்தை உடைய தில்லை மூவாயிரவரான வேதியர்கள் வெகுவாகப் பூசிக்கின்ற தலைவனே!  பொலிவு பொருந்திய மலையரசனாகிய மேரு மலையைப் போல உயர்ந்திருக்கும் கோபுரத்தின் மேற்கு வாயிலிலே மயில் மீது அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மகரந்தம் நிறைந்த மலர்களைச் சூடிய கூந்தலாலும்; சிலம்பணிந்து பதறாமல் நடக்கும் பாதத்தாலும்; கைத்தாளங்களாலும்; தாறுமாறாகப் பேசுகின்ற பேச்சின் விதங்களாலும்; வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு சிரிக்கின்ற சிரிப்பாலும்; அன்ன நடையாலும்; திமிர்ந்தெழுந்த மார்பாலும்; அந்த மார்பின் மேலே கிடக்கும் ஆடையாலும் மையலை ஏற்படுத்துகின்ற பெண்கள் மீது ஏற்படும் மோகமாகிய கடலிலே மூழ்குபவனாகிய நான் உன் அடியார்களாகிய மௌன ஞானியர் திருக்கூட்டத்தோடு சேர்ந்து கலந்திருக்கும்படியாக அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments