ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3
இளம் சிங்கம்
பாடல் 3
இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்?
இணை முலை நமுக நுண் இடை நுடங்கத்
துனி இரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எமை இட்டு அகல் கண்ணன், கள்வன்,
தனி இளம் சிங்கம், எம் மாயன் வாரான்,
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ.
எம்பெருமான் கண்ணன், என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், தனக்கு ஈடாக ஒருவரும் இல்லாத இளம் சிங்கம், எங்கள் மாயன், அவன் என்னுடைய இரு மார்பகங்களும் குழையும்படி, சிறிய இடை தளரும்படி என்னோடு கலந்தான், அது துக்கத்தைத் தரும் கலவியாக இருந்தது, ஏனெனில், அவன் அவ்வாறு என் மெய்யோடு கலந்தபிறகு, என்னை விட்டுச் சென்றுவிட்டான், இப்போது, அவன் இங்கே வர மறுக்கிறான், அவனுடைய தாமரைபோன்ற திருக்கண்களும், சிவந்த திருவாயும், கருத்த, குளிர்ந்த, நீண்ட குழல்களும், நான்கு திருத்தோள்களும் பாவியாகிய என்னுடைய மனத்தில் நின்று அறுக்கின்றன. நான் இனி என் உயிரை எப்படிக் காத்துக்கொள்வேன்?
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.