போரில்லா உலகம் - பேரன்பு
'உலக சமாதானத்துக்காக குரல் கொடுக்கும் உன்னத நோக்கிலும், பிறந்த ஊருக்கும், சமுதாயத்துக்கும் ஆக்கபூர்வமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலும் உருவானதே 'போரில்லா உலகம்'.
'உலக சமாதானத்துக்காக குரல் கொடுக்கும் உன்னத நோக்கிலும், பிறந்த ஊருக்கும், சமுதாயத்துக்கும் ஆக்கபூர்வமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலும் உருவானதே 'போரில்லா உலகம் - பேரன்பு' என்ற அமைப்பு. பூர்விக இல்லம், பத்து சென்ட் இடத்தை இதற்காகவே அர்ப்பணித்துவிட்டு, ஒன்பது ஆண்டுகளாகச் செயல்படுகிறேன்' என்கிறார் எழுத்தாளரும், சமூகநல ஆர்வலருமான நெல்லை குரலோன்.
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட பொட்டல் பூதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது போரில்லாத உலகம் குறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டுவரும் அவரிடம் பேசியபோது:
'போர் என்னும் பொல்லா அரக்கனால் உலகம் பெரும் துயரத்துக்கு உள்ளாகிறது. அநாகரிகத்தின் உச்சமான போர், முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை.இதை அனைத்து மக்களும் தெளிவாக உணர்ந்துள்ளனர்.
Advertisement
போரால் இந்தியா உள்பட பல நாடுகள் பல பிரச்னைகளை அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால்தான் போர் வேண்டாம் என எப்போதும் குரல் கொடுக்கிறோம். இதைக் கண்மூடித்தனமாகவோ, ஆர்வக் கோளாறாலோ கூறவில்லை. சுருக்கமாகச் சொல்கிறேன். இரண்டே இரண்டு விஷயங்கள்தான்.
ஒரு நிமிஷ பிரார்த்தனை
ஒன்று பிரார்த்தனை. ஆழ்ந்த நம்பிக்கையில், சுயநலமில்லாமல் உண்மையான சமூக அக்கறையில் நாம் பண்ணும் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அதனால்தான் எங்கள் பேரன்பு அமைப்பின் சார்பாக, 'ஒரே ஒரு நிமிஷம்... ப்ளீஸ்' என்ற பிரார்த்தனை வேண்டுகோளை பிரபலப்படுத்தி வருகிறோம்.
ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள். அதில் ஒரே ஒரு நிமிஷத்தை மட்டும்தான் கேட்கிறோம். இந்த உலகில் காற்று, நீர், ஆகாயம் என்று எத்தனையோ அம்சங்களை இலவசமாகப் பெறும் நாம், இந்தப் பூமியின் நலனுக்காக ஒரு நிமிஷம் ஒதுக்குவதே அழகு.
சுமுகத் தீர்வு
உலகில் உள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களும் ஒன்றிணைந்து ஒரே ஒரு தீர்மானமாக, 'எந்த நாடும் எந்தக் காரணம் கொண்டும் எந்த நாட்டோடும் போர் தொடுக்கக் கூடாது. எந்தப் பிரச்னையையும் பேசி சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும்' என முடிவெடுக்க வேண்டும். இன்றைய அதீத தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையதளத்தில் உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடினால் போதும். ஒரு மணி நேரத்தில் இந்த மகா தீர்மானத்தை நிறைவேற்றி போரில்லா உலக அமைதிக்கு வழி வகுத்துவிடலாம்.
இந்த அமைப்புக்கு நண்பர்கள், ஊர் பொதுமக்கள் தரும் ஆதரவும் ஊக்கமும் உற்சாகம் அளிக்கிறது. பத்திரிகைகளில் இதுதொடர்பாக எழுதி வருகிறேன்.
இந்தக் கருத்துக்கு ஆதரவு தரும் நண்பர்கள் நம் நாட்டில் மட்டுமல்லாமல், வெளி நாடுகளிலும் உள்ளனர். இவர்களையெல்லாம் 'போரில்லா உலகம் - பேரன்பு' என்னும் வாட்ஸ் அப் குழுவில் இணைத்து, தொடர்ந்து போரில்லா உலகம் சம்பந்தமான கருத்துகளை பதிவு செய்து வருகிறோம். போட்டிகளை நடத்தி, பரிசுகளை அளித்து ஊக்குவிக்கிறோம்.
தினசரி இரவு 9.30-க்கு பிரார்த்தனை நேரமாக அறிவித்து, ஒரு நிமிஷம் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
கடந்த வருடம், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-இல் எங்கள் ஊரில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 'போரில்லா உலகம் உருவாக வேண்டும்' என்ற பிரகடனத்தை தீர்மானமாக நிறைவேற்றினோம். அதே நாளில் இந்நாள், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் எங்கள் ஊரின் இரு நுழைவுவாயிலில் பேரன்பு வாசகம் இடம் பெற்ற விளம்பரப் பலகையை நிறுவி, சுற்று வட்டார அளவில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.
அடுத்த மாதம், எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், போரில்லா உலகம் -பேரன்பு பிரார்த்தனை வேண்டுகோளுடன் கூடிய வில்லைகளை பதிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். உலக அமைதிக்கான தியான மண்டபத்தை எழுப்ப வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. செயற்கை திணிப்பாக விளம்பரம் கூடாது. யாரிடமும் நிதி உதவி பெறக் கூடாது. இந்த இரண்டு விஷயத்திலும் ஆரம்பத்தில் இருந்தே கவனமாக இருக்கிறோம்.' என்கிறார் நெல்லை குரலோன்.