FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொடர்பு எல்லைக்கு வெளியே...

'பெத்தி' என்ற தெலுங்குத் திரைப்படத்தில், 1996-ஆம் ஆண்டு நிலவரத்தின்படி, 18 ஆயிரம் இந்தியக் கிராமங்களுக்குப் பெயரே இல்லை என்றும், அங்கு வாழ்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இல்லை என்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

22 ஆகஸ்ட் 2026, 7:58 pm IST
பகிர்:

'பெத்தி' என்ற தெலுங்குத் திரைப்படத்தில், 1996-ஆம் ஆண்டு நிலவரத்தின்படி, 18 ஆயிரம் இந்தியக் கிராமங்களுக்குப் பெயரே இல்லை என்றும், அங்கு வாழ்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இல்லை என்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரயில் நிலையத்துக்காக அந்தக் கிராமத்தில் நடைபெறும் போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படமானது, 2026-ஆம் ஆண்டில் இதுவரை அதிக அளவில் வசூலைப் பெற்றுள்ளது. ஆனால், உண்மையில் தென் அமெரிக்கா, ஆசியா, பசிபிக், பிரேசில், இந்தோனேஷியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 196 பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிற மக்களிடம் தொடர்பில்லாமல் தனியே வாழ்கிறார்கள் என்ற மலைக்க வைக்கும் உண்மை தற்போது தெரியவருகிறது.

தனித்தீவுகள், பாலைவனங்கள், அடர்ந்த வனப் பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு வெளியுலகத் தொடர்பே இல்லை என்றாலும், எண்ணெய் வளம், வன மரங்களை வெட்டுதல், கனிம வளங்களுக்கான சுரங்கங்களைத் தோண்டுதல் உள்ளிட்டவற்றுக்காக அரசு ஊழியர்களுடனும் வெளிநாட்டு நிறுவன ஊழியர்களுடனும் இவர்கள் மோத வேண்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் இவர்கள் குறித்த விவரங்களை அறிந்து வைத்துள்ளனர்.

'லைவ் சயின்ஸ்' என்ற அறிவியல் இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியானது. 'சர் வைவல் இன்டர்நேஷனல்' என்ற நிறுவன ஆய்வாளர் ஹைரஸ்ஸல் கூறுகையில், 'முற்றிலும் தொடர்பை விரும்பாதவர்கள், எதிர்பாராதவிதமாக வெளியுலகத்துடன் தொடர்பைக் கொள்பவர்கள் இவர்கள்' என்கிறார்.

Advertisement

Advertisement

உள்ளே நுழைந்தால் ஆபத்து: இந்தியாவில் அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள சென்டினெஸில் 150 பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களை 55 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்களாக நம்புகிறார்கள். இவர்கள் மீன் பிடித்தல், கத்தியால் விலங்குகளை வேட்டையாடிக் கொல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

படகுகளோ அல்லது ஹெலிகாப்டரோ தங்கள் தீவுக்கு அருகில் வரும்போது தங்கள் வில்லை எடுத்து அம்பைத் தொடுத்து அவற்றைத் தடுக்கின்றனர்.

மூன்று மைல் சுற்றுவட்டாரத்துக்கு இந்தத் தீவுக்கு அருகே யாரும் செல்லக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. இங்கு சென்று தீவுக்குள் நுழைய முயன்ற ஜான் ஆலன் சா என்பவரை 2018-இல் இந்தக் குழுவினர் அம்பை எறிந்து கொன்றனர்.

அமேசான் பகுதியில் உள்ள காடைபூவை ஆராயச் சென்ற பெண் ஹ்யூயர்டாஸ், 'இங்குள்ளவர்கள் வெளியுலக மக்கள் தங்களைப் பார்ப்பதை விரும்புவதில்லை' என்பதை ஆய்வு மூலம் கண்டார்.

கவாஹிவா என்ற ஒரு குழு தங்களை யாருமே காண முடியாத விதத்தில் 1999-ஆம் ஆண்டு வரையில் வாழ்ந்து வந்தனர். எதிர்பாராத வகையில் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று ரஸ்ஸல் குறிப்பிடுகிறார்.

பிரேசிலில் வாழ்ந்து வரும் ஒரு மக்கள் குழுவினர் 2021-இல்தான் கண்டுபிடிக்கப்பட்டனர். பெருவில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் வாழ்ந்து வரும் மஸ்கோபிரோ என்ற குழுவில் 750 பேர் உள்ளனர்.

இவர்களுக்கு நவீன வாழ்க்கை முறையைச் சொல்லித் தரவேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்களை நன்கு ஆராய்ந்து வரும் சர்வைவல் இன்டர்நேஷனல் நிறுவனமோ இவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் அவர்களைத் தங்கள் போக்கில் வாழவிடுவதே அவர்களுக்கு நாம் செய்யும் பெரிய நன்மை என்று தெரிவிக்கிறது. நவீன நாகரிகத்தின் செல்வாக்கு இல்லாமல் வாழும் இவர்களை மனிதக் குலத்தின் முதல் பக்கம் எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments