FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோலிவுட் ஸ்டூடியோ! குழந்தை ரசிகர்கள் - நெகிழும் மமிதா!

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

30 ஆகஸ்ட் 2026, 10:45 am IST
சூர்யா, மமிதா பைஜு
பகிர்:

செப் 18-இல் 'தி டார்க் ஹெவன்'

'தி டார்க் ஹெவன்' திரைப்படம் செப்டம்பர் 18 - இல் வெளியாகிறது. முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், 'ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் ஒரு வெட்டுக்குக்கூட வாய்ப்பு இல்லாமல் அழகாக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது' என்று பாராட்டியுள்ளனர்.

'ஈ3' படத்தை இயக்கிய பாலாஜி, 'தி டார்க் ஹெவன்' படத்தை இரண்டாவதாக இயக்கியிருக்கிறார். கொலை சார்ந்த ஒரு துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இதன் படப்பிடிப்பை திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், தென்காசி போன்ற இடங்களில் இதுவரை கேமரா வெளிச்சம் படாத இடங்களில் படப்பிடிப்பு செய்துள்ளனர். துப்பறியும் காவல் அலுவலர் வேடத்தில் பிக் பாஸ் புகழ் சித்து நடித்துள்ளார். இன்னொரு பிக் பாஸ் பிரபலமான தர்ஷிகா சக்தி வாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி போன்ற அனுபவ நடிகர்களின் பங்களிப்பும் பெரும் பலம் சேர்த்துள்ளது.

Advertisement

Advertisement

முன்பே வெளியாகியிருக்க வேண்டிய இந்தப் படத்தின் வெளியீட்டுத்தேதி 'ஜனநாயகன்' வெளிவந்ததால் மாற்றி வைக்கப்பட்டது.

குழந்தை ரசிகர்கள் - நெகிழும் மமிதா!

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பட வெற்றி விழா நிகழ்வில் மமிதா பைஜு பேசுகையில், 'படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும்போது மனசுக்குள் ஒரு நிறைவு கிடைக்கும். படத்தைப் பார்த்துட்டு நிறையப் பேர் பாராட்டினார்கள். சில வீடியோக்களை நான் பார்த்தேன். சின்ன குழந்தைகள் 'பட்டாம்பூச்சி' பாட்டு வரும்போதும், என்னுடைய நகைச்சுவைக் காட்சிகளின்போதும் சிரிச்சு மகிழ்ந்தனர். அவர்களைப் பார்த்ததும் எனக்கு என்னுடைய பழைய நினைவுகள்தான் ஞாபகம் வந்தது. அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்லி விவரிக்கவே முடியாது' எனப் பகிர்ந்திருக்கிறார்.

என் சினிமா போராட்டம் சென்னையில்தான் தொடங்கியது - ரவி தேஜா!

ரவி தேஜா நடித்திருக்கும் 'இருமுடி' படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த டோலிவுட் படத்தை 'நின்னு கோரி', 'குஷி' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சிவா நிர்வானா இயக்கியிருக்கிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ரவி தேஜா, 'எனக்கு தமிழ் மொழி மீது ஈர்ப்பு உண்டு. தமிழின் நையாண்டியான பேச்சு எனக்கு ரொம்பவே பிடிக்கும். என்னுடைய திரையுலகப் போராட்டங்கள் 1990-களின் நடுப்பகுதியில் சென்னையில்தான் தொடங்கியது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்தான் இந்தப் படத்தின் ஆன்மா. எடிட் ரூமில் பின்னணி இசை இல்லாமலேயே இந்தப் படத்தைப் பார்த்தபோதே எனக்குள் ஒரு பெரிய சிலிர்ப்பு ஏற்பட்டது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் பார்த்துட்டு ஆண்கள், சின்ன குழந்தைகள்னு எல்லோரும் அழுகிறார்கள். உண்மையிலேயே இது இதயத்தைத் தொடும் ஒரு படம். படத்தின் குழந்தை நட்சத்திரம், நட்சத்திராவுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பிரியா பவானி சங்கருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்' என்றார்.

ஏழு படங்களை அறிவித்த மோகன்லால்!

நடிகர் மோகன்லால் தன்னுடைய அடுத்த 7 புதிய திரைப்படங்களை ஒரேநேரத்தில் சமூக ஊடகங்களில் அறிவித்து, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். விஷ்ணு மோகன், அனூப் சத்யன், பிரியதர்ஷன், திலீஷ் போத்தன், சத்யன் அந்திக்காடு, ஜூட் அந்தனி ஜோசப், ஜீத்து ஜோசப் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார் மோகன்லால். இதில் பிரியதர்ஷன் இயக்கவுள்ள படம், அவர் இயக்கும் 100-ஆவது திரைப்படமாகும்.

அதேபோல, ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் சில மாதங்களுக்கு முன்பு 'த்ரிஷ்யம் 3' திரைப்படம் வெளியாகியிருந்தது. சத்யன் அந்திக்காடு இயக்கத்தில், மோகன்லால் நடித்திருந்த 'ஹ்ருதயபூர்வம்' படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. மீண்டும் அவர் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவிருக்கிறார். அதோடு அவருடைய மகன் அனூப் சத்யன் இயக்கத்திலும் மோகன்லால் நடிக்கவிருக்கிறார். மூத்த இயக்குநர்களோடு மட்டுமல்லாமல், புதிய தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து மோகன்லால் களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments