சம்பாதித்த பணத்தில் சாலையோரத்தில் நிலம் வாங்கிய அறுபது வயதான தொழிலாளி நல்லதம்பி, அங்கு அவர் தனக்குத்தானே சிலை அமைத்தார். அறக்கட்டளையையும் ஏற்படுத்திய அவர், அன்னமடத்தை அமைத்து, தினம்தோறும் பொதுமக்களுக்கு சிறுதானிய கூழை வழங்கி வருகிறார்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி, குறிச்சி அணைமேடு கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 25 ஆண்டுகளுக்கு முன் இவர் பூர்விகச் சொத்துகளைப் பொருள்படுத்தாமல் வீட்டைவிட்டு வெளியேறி அத்தனூர்பட்டி கிராமத்தில் குடியேறினார்.
அவர் கூறியது:
'தொடக்கத்தில் கட்டடத் தொழிலாளியாக இருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக பழைய கண்ணாடி, நெகிழிக் குப்பிகளைச் சேகரித்து விற்பனை செய்தேன். உழைத்த பணத்தில் வாழ்க்கையை நடத்தினேன்.
சமூகத்தில் தனியொருவனாகப் போராடி வாழ்ந்த வரலாறு கால ஓட்டத்தில் மறைந்துவிடாமல், எதிர்காலச் சந்ததியர் அறியும் வகையில் புதுமையாகச் செய்ய வேண்டும் என எண்ணினேன்.
சிறிதுசிறிதாகச் சேர்த்த பணத்தில், வாழப்பாடி-பேளூர் பிரதான சாலையோரத்தில் இரு வீட்டுமனைகள் வாங்கினேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட ஓக்கரை கிராமத்திலுள்ள சிற்பியிடம் 5 அடி உயரத்தில் இரு கரம் கூப்பியபடி நான் நிற்கும்படி என் முழு உருவச்சிலையை கருங்கல்லில் வடித்து வாங்கி வந்தேன். இதை எனது நிலத்தில் நிறுவி, சிறு மண்டபம் அமைத்தேன்.
சேமிப்புப் பணத்தையும், வேறு பகுதியில் வாங்கி வைத்திருந்த வீட்டுமனை விற்ற பணத்தையும் கொண்டு, எனது நண்பர் மாணிக்கம் என்பவருடன் இணைந்து, எனது பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கினேன். சிலை வைத்திருந்த நிலத்தில் 1,200 சதுர அடியில் அன்னமடத்தைக் கட்டி, அண்மையில் திறந்தேன். தரையில் இருந்த எனது சிலையை தற்போது அன்னமடத்தின் மேல் பகுதியில் நிறுவியுள்ளேன்.
அண்மையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தொடை எழும்பில் முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், இந்த அன்னமடத்தை தினம்தோறும் திறந்து வழிப்போக்கர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறுதானியக் கூழ் வழங்கி வருகிறேன்.
மனக்கவலை இருப்பினும், பிறருக்கு உதவும் அளவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது ஆறுதலைத் தருகிறது' என்கிறார் நல்லதம்பி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.