முகப்பு
தினமணி கதிர்

உலகை உலுக்கிய புகைப்படம்...

'வேர்ல்ட் ஃபிரஸ் போட்டோ' என்ற புகைப்பட பத்திரிகை அமைப்பு 1955-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமில் தொடங்கப்பட்டது.

Updated On : 24 மே 2026, 4:06 am IST
- Carol Guzy
பகிர்:

'வேர்ல்ட் ஃபிரஸ் போட்டோ' என்ற புகைப்பட பத்திரிகை அமைப்பு 1955-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமில் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் நடைபெறும் சமூக, அரசியல், மனிதாபிமான, சுற்றுச்சூழல் சம்பவங்களைப் புகைப்படங்களில் பதிந்து மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் நடத்தும் உலக ஊடக புகைப்படப் போட்டியில் புகைப்படச் செய்தியாளர்கள், ஆவணப்பட புகைப்படக் கலைஞர்கள், செய்தி நிறுவனத்தினர் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர்.

இந்தப் போட்டியில் போரியல், அகதிகள் பிரச்சினை, காலநிலை மாற்றம், இயற்கைப் பேரழிவுகள், மனித உரிமைகள், அன்றாட மனித வாழ்க்கை போன்ற பல்வேறு தலைப்புகளில் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் இடம்பெறும். அவற்றை சர்வதேச நடுவர் குழுவினர் மதிப்பீடு செய்வதோடு, பல பிரிவுகளில் விருதுகளை அறிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு 141 நாடுகளில் இருந்து 57 ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படங்கள் போட்டிக்காக அனுப்பப்பட்டன. போராட்டங்கள், போர்கள், காலநிலை மாற்றம், மனித வாழ்வின் உணர்ச்சிமிக்கத் தருணங்களை எடுத்துக்காட்டும் புகைப்படங்களே இந்த ஆண்டின் மையமாக இருந்தன.

தலைசிறந்த புகைப்படமாக அமெரிக்கப் புகைப்படச் செய்தியாளர் கரோல் காஸி எடுத்த 'செபரேடட் பை ஐஸ்' என்ற தலைப்பிலான புகைப்படம் தேர்வானது. இந்தப் புகைப்படமானது, அமெரிக்காவில் வசிக்கும் குடியுரிமை இல்லாதவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கையின் பாதிப்பை எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்கக் குடியேற்றம், சுங்க அமலாக்க அமைப்பினர் நடவடிக்கையால் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்த ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் வேதனையை பதிவு செய்கிறது.

அமெரிக்க அலுவலர்கள் குடும்பத் தலைவர் லூயிஸை கைது செய்யும் தருணத்தில், மனைவி கோச்சாவும், மூன்று குழந்தைகளும் கதறி அழும் காட்சி இதில் பதிவாகியுள்ளது. இந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானபோது உலகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மனித உரிமைகள், குடியேற்றக் கொள்கைகள், குடும்பப் பிரிவினையின் தாக்கம் ஆகியவற்றை மிக வலுவாக வெளிப்படுத்தியதற்காக இந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜெளமனா எல் செயின் கெளரி, 'நீதிக்காக உருவாக்கப்பட்ட கட்டடங்களிலேயே மனிதர்களின் வாழ்க்கை சிதைந்து போகும் அவலமான உண்மையை இந்தப் படம் பதிவு செய்கிறது' என்று கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற கரோல் காஸிக்கு 10 ஆயிரம் யூரோ பரிசுத் தொகையுடன் நவீன ஃப்யூஜி காமிராவும் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.