தலைகீழாய் கணித வாய்பாடு...
கணிதம் என்றாலே மாணவர்கள் பலருக்கு அலர்ஜி. 'அல்ஜிப்ரா இஸ் காப்ரா' என்றும் சொலவடை உண்டு.
கணிதம் என்றாலே மாணவர்கள் பலருக்கு அலர்ஜி. 'அல்ஜிப்ரா இஸ் காப்ரா' என்றும் சொலவடை உண்டு. கணித வாய்பாட்டை மனப்பாடம் செய்தாலும்கூட எழுதும்போது அல்லது சொல்லும்போது மாணவர்கள் சிலவற்றை மறந்துவிடுவார்கள். இந்த நிலையில், கீழிருந்து (ரிவர்ஸ்) மேல் வரை ஒன்பது வயதுச் சிறுவன் ஒப்பித்துள்ளார் என்றால் ஆச்சரியம்தானே!
சிவகங்கை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி - வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீ வர்ஷன், டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் & தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கணிதம் தனக்குக் கடினமாக இருக்கிறது என்று தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அவர் அளித்த ஊக்கத்தால், கணித வாய்பாடுகளைப் பிழையின்றிக் கற்று, பின்னர் அவற்றைத் தலைகீழாகக் கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
Advertisement
Advertisement
இவரது திறமையைக் கண்டறிந்த ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக, ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்பாடுகளைக் கீழிருந்து மேல் (ரிவர்ஸ்) ஒப்பித்து அசத்தினார்.
ஒரு நிமிடம், 46 விநாடிகளில் கீழிருந்து மேல் வரை கூறி ஒப்பித்த இவரது சாதனையைப் பாராட்டி 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவரை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் நேரில் அழைத்து வாழ்த்தினார்.
'என்னுடைய சாதனைக்கு எனது தாய் அளித்த ஊக்கம்தான் காரணம். ஐ.ஏ.எஸ். அலுவலராக வேண்டும் என்பதே எனது லட்சியம்' என்கிறார் ஸ்ரீவர்ஷன்.
அவர் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் மைதிலி, ' நினைவாற்றலை அதிகரிக்கும் வகையில், பள்ளியில் ஆங்கில எழுத்துகள் மற்றும் 100 எண்கள் வரை கீழிருந்து மேலாக ஒப்பிப்பதற்குப் பயிற்சி அளிப்பது வழக்கம். இதை அடிப்படையாக வைத்து ஸ்ரீவர்ஷனிடம் தாய் வனிதா, 1 முதல் 10 வரை உள்ள கணக்கு வாய்பாட்டை கீழிருந்து மேலாக மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பயிற்சியை அளித்துள்ளார். அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றி' என்கிறார்.
-ஆர். மோகன்ராம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.