அஜித்தின் நம்பிக்கைதான் பலம்
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள "கங்குவா' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தியா முழுமைக்கும் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, பாபி தியோல் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
படத்தின் இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சிவா பேசும் போது...
"கங்குவா' திரைப்படத்தை இரண்டு ஆண்டுகள் எடுத்தோம். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் சூர்யா என்ற மனிதரிடம் பழக அற்புதமான வாய்ப்பை எனக்குக் கடவுள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
Advertisement
இந்த படத்தில் 100 சதவிகிதத்தைக் கொடுத்து விடலாம் என்று 100 முறை சொல்லியிருப்பார் சூர்யா. ஆனால், நான் உங்களை நிறைய நாள்கள் கஷ்டப்படுத்தியிருக்கிறேன். ஏழு நாள்கள் தண்ணீர் உள்ளேயான காட்சிகளை எடுத்தோம். அவ்வப்போது வெளியே வந்தாலும், ஆனால் அந்த நாட்களில் சூர்யா பெரும்பாலும் தண்ணீருக்குள்ளேயேதான் இருந்தார் . என்னுடைய அடுத்து 10-15 ஆண்டுகளுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அடித்தளமாக இருக்கும் என்று ஆழமாக நம்புகிறேன்.
இந்தப் படத்தை பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள்.மக்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுப்பது மிகப்பெரிய விஷயம். அதை எனக்குக் கடவுள் கொடுத்துள்ளார். ஆனால், இந்த ஆசை எனக்கு முதல்முறையாக வந்தப்போது எனக்கு அடித்தளம் தந்தது என்னுடைய நண்பர், வழிகாட்டி, வரம் அஜித் குமார் சார்.
அவர் என் மேல் வைத்த நம்பிக்கை தான் எனக்கு பலத்தை தந்துள்ளது. கார்கி சார் இந்த படத்திற்கு வசனம் எழுதியிருப்பது வரம். இந்த படத்தில் சூர்யா புது மீட்டரைப் பிடித்துள்ளார்'' என்று பேசியிருக்கிறார் இயக்குநர் சிவா.