ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் காட்சிகள்!
அண்மையில் வெளிவந்த 'ஆறாம் வேற்றுமை' படத்துக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
அண்மையில் வெளிவந்த 'ஆறாம் வேற்றுமை' படத்துக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதையடுத்து இப்படத்தின் இயக்குநர் ஹரி கிருஷ்ணன் தனது அடுத்த படப் பணிகளைத் துவக்கியுள்ளார். பி.வி. ஆர். ஃபிலிம் மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை முருகன் தயாரிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'ஆறாம் வேற்றுமை படத்துக்கு தமிழ் ரசிகர்கள் தந்த பேராதரவுக்கு நன்றி! இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரை ஆளுமைகள் இந்தப் படத்தை வித்தியாசமான முயற்சி என்று பாராட்டி இருந்தனர்.
ஊடகங்களும் நல்ல ஆதரவு தந்தன. அந்தக் காலகட்டத்தில் இப்படத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியாததற்குப் பல காரணங்கள் இருந்த பொழுதிலும், தற்பொழுது இத்திரைப்படம் இணையத்தில் வெளியாகி, சமூக வலைதள செயலிகளினால் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது.
Advertisement
Advertisement
பலரும் நல்ல கருத்துகளைப்பதிவிட்டு ஆதரவு அளித்த அந்தத் தருணத்தில் என்னுடைய அடுத்த பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். நல்ல சிந்தனை, சிறப்பான நோக்கம், சமூக அக்கறை கொண்ட கதைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
இந்தக் கதையின் கரு தயாரிப்பாளருக்குப் பிடித்த காரணத்தால் அவர் இந்தப் படத்துக்கு முன்னுரிமை தந்து தயாரிக்கிறார். படப்பிடிப்புக்கான இடங்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படத்தின் பெயரும் அறிவிக்கப்படும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல காட்சிகள் உருவாக்கப்படவுள்ளன. இதற்காக ஹாலிவுட் நிறுவனம் ஒன்றோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது'' என்றார்.