பொதுவாக புதிய திரைப்படங்கள் உருவானதும் அதன் பிரதியை திரை பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள். அது 'செலிபிரிட்டி ஷோ' என்று அழைக்கப்படும். திரையீட்டுக்குப் பிறகு படத்தைப் பார்த்த பிரபலங்கள் சொல்கிற கருத்தை விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு திரைப்படம் என்பது சாமான்ய பார்வையாளர்களை எந்த அளவிற்குப் போய்ச் சேர்கிறது, எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வெகுஜன மக்களின் மன நிலை என்ன என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை.
இப்படிப்பட்ட நிலையில் 'பரிசு' படத்தை கல்லூரி மாணவியருக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளனர். சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை இது.
சின்ன சின்ன சலனங்களுக்கும் பருவக்கவர்ச்சிகளுக்கும் இடம் தராமல் லட்சியத்தை நோக்கிச் சென்று வெற்றி அடையும் பெண் குறித்து இப்படம் பேசுகிறது. ஜான்விகா, ஜெய் பாலா, கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்றாயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார் கலா அல்லூரி. படம் பார்த்த பின்னர் படக்குழுவினரிடம் மாணவியர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். அவர்கள் ஆண்களை மையமாகக் கொண்டுள்ள திரையுலகில் பெண்ணை மையமாகக் கொண்டுள்ள 'பரிசு' படத்தின் கதையையும், படத்தின் பேசுபொருளையும் வெகுவாகப் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.