விலங்குகள் நல ஆர்வலராக மாறிய நடிகை சதா!
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை 'ஜெயம்' சதா, திரைப்பட உலகிலிருந்து விலகி 'வீகன்' வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
சக்கரவர்த்தி
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை 'ஜெயம்' சதா, திரைப்பட உலகிலிருந்து விலகி 'வீகன்' (விலங்குப் பொருள்கள் எதையும் பயன்படுத்தாத) வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவராகவும், விலங்குகள் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஆர்வலராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
வன விலங்குகளைப் படம் பிடிப்பதற்காக, இவர் ஆப்பிரிக்க வனச் சரணாலயங்களுக்கும், இந்திய தேசியப் பூங்காக்களுக்கும் அடிக்கடி செல்கிறார்.
Advertisement
Advertisement
நேரம் காலம் பார்க்காமல் சரணாலயங்களைச் சுற்றிச் சுற்றி வரும் நாற்பத்தொரு வயதான சதா கூறியது:
'கரோனா காலத்துக்குப் பின்னர் நான் மத்தியப் பிரதேசத்தில் பன்னா என்ற இடத்தில் 'அகிம்சா' படப்பிடிப்பில் பங்கேற்றேன். அங்கு, பன்னா புலிகள் காப்பகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே இருந்த விடுதியில் நான் தங்கியிருந்தேன். பல பார்வையாளர்கள் ஜீப்புகளில் சுற்றித் திரிவதைக் கண்ட ஆர்வம்தான் என்னை வனவிலங்கு புகைப்பட உலகுக்குள் நுழைய வழிவகுத்தது.
வனவிலங்குகளைப் பெரும்பாலும் நான் காணொலியாகப் படம் பிடிக்கிறேன். அது எனக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. காணொலியாகப் பொருத்தமான பின்னணி இசையுடன் அதைத் தொகுப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் நிறைய புகைப்படங்களையும் எடுக்கிறேன். இவை இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன'' என்கிறார் சதா.
இதுவரை...
நடிகையாக இருந்து புகைப்படக் கலைஞராக மாறியவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
ஆஸ்கர், எம்மி விருதுகளை வென்ற நடிகை ஜெசிகா லாங்கே, தனக்குப் பிடித்த கருப்பு-வெள்ளை படங்களின் தொகுப்புகளை வெளியிட்டார்.
நடிகையும், சின்ன திரை நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ட்ரூ பேரிமோர், தனது அன்றாட வாழ்வில் காணப்படும் இதய வடிவப் பொருள்களைப் படம்பிடித்து, 'ஃபைண்ட் இட் இன் எவ்ரிதிங்' (2014) என்ற புகைப்படப் புத்தகத்தை வெளியிட்டார். அவரது படைப்புகள் நியூயார்க் நகரில் உள்ள சர்வதேசப் புகைப்பட மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மறைந்த இத்தாலிய சினிமா ஜாம்பவானான ஜினா லோலோபிரிஜிடா, 1970-களில் புகைப்படப் பத்திரிகையாளராக இருந்தார். கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் வெளிப்படையான நேர்காணலையும் புகைப்படப் படப்பிடிப்பையும் நடத்துவதற்காக அவர் மாறுவேடத்தில் சென்றதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் ஜினா லோலோபிரிஜிடா 'இத்தாலியா மியா' (1973) என்ற நூலை வெளியிட்டார்.
நாகூரில் பிறந்த பாலிவுட் நட்சத்திரம் வஹீதா ரஹ்மான், ஆப்பிரிக்க சஃபாரிகள், இயற்கை சார்ந்த புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி வந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.