முகப்பு
வெள்ளிமணி

ஆணவம் அழிந்தது!

"ஆணவம் - தற்பெருமை' என்கிற தீய குணம் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும். அப்படிப்பட்ட குணமுடையவன் இறுதியில் அழிந்தே போவான் என்பதை நமக்கு உண்மை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 4:02 pm IST
பகிர்:

"ஆணவம் - தற்பெருமை' என்கிற தீய குணம் இறை நிராகரிப்பில் தள்ளிவிடும். அப்படிப்பட்ட குணமுடையவன் இறுதியில் அழிந்தே போவான் என்பதை நமக்கு உண்மை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

"கர்வம், வீண் பெருமை, ஆணவம் ஆகிய தீய குணங்களைக் கொண்ட மனிதனை அல்லாஹ் நேசிப்பதில்லை (அல்குர் ஆன்:31:18)''.

கொடியவர்களான நம்ரூது - ஃபிர்அவ்ன் இருவரும் இவ்வுலகில் இறைவனை மறந்து, தற்பெருமை, ஆணவத்தால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இறுதியில் இருவரும் அழிந்தே மாண்டனர்.

Advertisement

Advertisement

நபி இப்ராஹீம் (அலை) ஓரிறைக் கொள்கையை மக்களிடம் எடுத்துரைத்தபோது, கொடியவன் நம்ரூது கொதித்தெழுந்தான். இப்ராஹீம் நபியை நெருப்பு குண்டத்தில் வீசி எறியத் திட்டமிட்டிருந்தான்.

இறைவன் நபிக்கு உதவ வானவர்களை ஏவினான். இப்ராஹீம் நபி இறைவன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்ததால், "எனது காரியங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்' என்று விட்டார். நபியவர்களை கொடியவன் நம்ரூது நெருப்புக் குண்டத்தில் வீசி எறிந்ததும் "எது நடந்தாலும் நடக்கட்டும்; அல்லாஹ் காப்பான்' என்கிற ஒரே நம்பிக்கையில் மூழ்கியிருந்தார்.

"நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிர்ச்சியாகவும், சுகமளிக்கிறதாகவும் ஆகி விடு'' என நெருப்பைப் படைத்த இறைவன் கட்டளையிட்டான். இறைவனது ஆணைப்படியே நடந்தது.

இப்ராஹீம் நபி இறை நம்பிக்கையால் அத்துன்பத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்.  இதனைக் கண்ட நம்ரூத் வியப்படைந்தான். "நான் அவரது இறைவனை ஏற்கப்போகிறேன்' என்றான். அவனது அமைச்சன் தடுத்துவிட்டான்.

நபியின் செல்வாக்கு வளர்வதைக் கண்டு, நபியை ஊரை விட்டே வெளியேற்றினான்.  இறுதியாக ஒரு கொசு நம்ரூதுவுடைய மூக்குத் துவாரத்தில் புகுந்து குடைந்தெடுத்தது.  வேதனை தாங்க இயலாது, நாற்பதாண்டுகள் துன்புற்று இறந்தான்.

"நானே இறைவன்! என்னைத்தான் எல்லோரும் வணங்க வேண்டும்'' என மக்களை மிரட்டினான் கொடியவன் ஃபிர்அவ்ன். இஸ்ரவேலர்கள் வம்சத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்து தன்னையும், தனது ஆட்சியையும் அழிப்பது போன்ற ஒரு கனவு கண்டான் ஃபிர்அவ்ன்.

அன்றிலிருந்து இஸ்ரவேலர்களுக்கு சொல்லொனா கொடுமைகளைச் செய்தான் ஃபிர்அவ்ன். அக்குழந்தை பிறவாது தடுக்க பன்னிரண்டாயிரம் நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றான். எனினும், நபிமூஸா (அலை) அவர்களைப் பிறக்கச் செய்தான். மேலும், ஃபிர்அவ்னின் அரண்மனையிலேயே வளரவும் செய்தான் இறைவன்.

மூஸா நபி வளர்ந்து வாலிபராகி தனது சகோதரர் ஹாரூனுடன் தங்கி இருந்தார்கள். இறைவனின் ஆணைப்படி இருவரும் ஓரிறைக் கொள்கையை ஃபிர்அவ்னிடம் எடுத்துரைத்தார்கள். ஆனாலும் நாளுக்கு நாள் ஃபிர்அவ்னின் கொடுமைகள் அதிகரித்தன. இறை ஆணைப்படி மூஸôநபி இஸ்ரவேலர்களை அழைத்துக்கொண்டு எகிப்தை விட்டு வெளியேறியதைக் கேள்வியுற்று, அவர்களைப் பிடிக்க பெரும் படையுடன் பின் தொடர்ந்தான் ஃபிர்அவ்ன். ஆனால்,ஃபிர்அவ்னும் அவனது படைகளும் செங்கடலில் மூழ்கி மடிந்தனர்.

இறைவனுக்கு அஞ்சாது மாறு செய்தவர்களை இறைவன் அழித்துள்ளான். எனவே நாம் இறைவனுக்கு அஞ்சி, நற்செயல்கள் பல புரிந்து, அவனது அருளைப் பெறுவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.