முகப்பு
வெள்ளிமணி

சென்னையில் திருவரங்கம்!

வைணவர்களுக்குக் கோயில் என்றால் பெரிய கோயில் எனப் போற்றப்படும் திருவரங்கம் ஆகும்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:51 PM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:48 PM

வைணவர்களுக்குக் கோயில் என்றால் பெரிய கோயில் எனப் போற்றப்படும் திருவரங்கம் ஆகும். அதேபோன்று சென்னை நகரிலும் வழிபாடு சிறப்புமிக்க திருவரங்கநாதசுவாமி அருள்புரியும் திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையில் செüகார்பேட்டை என அழைக்கப்படும் பகுதியில் முல்லா சாகிப் தெருவில் இத்திருக்கோயில் உள்ளது.

கிழக்கு நோக்கிய திருக்கோயில். நுழைவு வாயிலில் மூன்று நிலை கோபுரம் புதியதாக திருப்பணி செய்யப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. அடுத்துள்ள கொடி மரத்தை அடுத்து கருவறையில் மூலவராக அரங்கநாதர் காட்சி தருகிறார். சிறிய திருமேனி. சயனக் கோலத்தில் நான்கு கரங்களில் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிப்பது சிறப்பானது. வலது கரம் அபயம் அளிக்கும் கோலத்திலும், இடது கரம் தொடை மீது வைத்திருக்கும் கோலத்திலும் காணப்படுகிறது. அரங்கனின் திருவடியில் தாமரை மலர் மற்றும் ஸ்ரீதேவியும் } பூதேவியும் அமர்ந்து காட்சிதரும் அற்புத வடிவைக் கண்டு வணங்கலாம்.

அரங்கன் எழுந்தருளி அருள்புரியும் கருவறைக்கு மேலே திருவரங்கம் திருக்கோயில் போன்று பிரணவாகர விமானம் காட்சியளிக்கிறது. விமானத்தில் பள்ளிகொண்ட அரங்கன், கண்ணன் கீதோபதேச காட்சி, ராமர் மற்றும் தசாவதார வடிவங்கள் மற்றும் ஆழ்வார்களின் வடிவங்கள் அழகிய சுதை சிற்பங்களாகக் காட்சியளிப்பது சிறப்பு.

Advertisement

கருவறை நுழைவு வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். கருவறைக்கு முன் 16 கால் மண்டபமும் உள்ளது. அரங்கனின் கருவறைக்கு வலப்புறம் நம்மாழ்வார் சந்நிதியும், இடதுபுறம் ராமானுஜர் சந்நிதியும் அமைந்துள்ளன. கருவறைக்கு எதிரிலே பெரிய திருவடியான கருடாழ்வார் காட்சி தருகிறார்.

இக்கோயில் ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது. தெற்கு திருச்சுற்றில் முதலில் காண்பது கண்ணாடி சேவை அளிக்கும் மண்டபம். இம்மண்டபத்தின் விதானத்தில் ஆழ்வார்களின் அழகிய ஓவியங்கள் காட்சி தருகின்றன.

இதனை அடுத்து கிழக்கு நோக்கிய தாயார் சந்நிதி. இதில் அரங்கநாயகி தாயார் அமர்ந்த கோலத்தில் மேவிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களை அபய } வரதமாகக் காட்டியும் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் தரிசனம் தருகிறாள். தாயார் சந்நிதிக்கு வலப்பக்கத்தில், வேணுகோபாலர் } ருக்மணி } சத்தியபாமாவுடன் சேவை சாதிக்கிறார். இடது பக்க சந்நிதியில் ராமர், சீதா பிராட்டியுடன்,

பரதன் - லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோருடன் பட்டாபிஷேக காட்சி போன்று அனைவரும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இச்சந்நிதிக்கு எதிரே பக்த ஆஞ்சநேயர் சந்நிதி அமைந்துள்ளது. தாயார் சந்நிதி எதிரே உள்ள விசாலமான பெரிய மண்டபத்தில்தான் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:48 PM

வடக்கு திருச்சுற்றில் அமைந்துள்ள சந்நிதியில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாள் நாச்சியாரின் தரிசனம் கிடைக்கிறது. இம்மண்டபத்தை அடுத்து ஆழ்வார்களின் சந்நிதியும், ஆளவந்தார் சந்நிதியும் அமைந்துள்ளன. மண்டபத்தை அடுத்து கிழக்கு திருச்சுற்றில் யோக நரசிம்மர் எழுந்தருளி சேவை சாதிக்கும்

சந்நிதி அமைந்துள்ளது. அவர் யோக பட்டம் அணிந்து மேற்கு நோக்கி அருள்புரிவதும், இக்கோயிலின் மண்டபத் தூண்களில் ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் பெருமாளின் பல்வேறு

வடிவங்கள் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி அளிப்பதும் சிறப்பானதாக விளங்குகிறது.

தொடக்கக் காலத்தில் இது பஜனை கோயிலாக இருந்து, பின்னர் அரங்கநாத சுவாமி மற்ற வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்புமிக்க திருக்கோயிலாக வளர்ச்சி பெற்றது என்பதை தலவரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. இக்கோயிலின் வளர்ச்சியில் பல அன்பர்கள் பங்கு கொண்டதை இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. மார்கழியில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. அத்துடன் நம்மாழ்வார் மோட்சம் என்ற வைபவமும் சிறப்பாக நடைபெறுகிறது. துவாதசி நாள் அன்று உற்சவர் தம் இரு தேவியர்களுடன் சயனக் கோலத்தில் காட்சி தரும் வைபவம் இத்திருக்கோயிலில் சிறப்பானதாக விளங்குகிறது.

சென்னை நகரில் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்புடன் விளங்கும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தின் அபிமான தலம் என்ற பெருமை பெற்று இக்கோயில் விளங்குகிறது என்று கூறுவர். இத்திருக்கோயிலுக்கு அண்மையில் குடமுழுக்கு என்ற சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

(தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை- பணி நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.