முகப்பு
உலகம்

மோசடி மின்னஞ்சல்களால் 22 கோடி ரூபாயை இழந்த விமான நிறுவனம்! 

நிதி பரிமாற்றம் தொடர்பாக அனுப்பப்பட்ட மோசடி மின்னஞ்சல்களால் ஜப்பான் விமான நிறுவனம் 22 கோடி ரூபாயை இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:24 PM
பகிர்:

டோக்யோ: நிதி பரிமாற்றம் தொடர்பாக அனுப்பப்பட்ட மோசடி மின்னஞ்சல்களால் ஜப்பான் விமான நிறுவனம் 22 கோடி ரூபாயை இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஏபி செய்தி தொலைக்காட்சியில் அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:

ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த ‘ஜப்பான் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனமானது, தனது பயன்பாட்டிற்காக போயிங் 777 ரக விமானம் ஒன்றை அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி  வருகிறது. இதற்காக அந்நாட்டு நிதி நிறுவனம் ஒன்றுதான் பணப்பரிமாற்றம் முதலான ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. 

இந்நிலையில் விமான குத்தகைப் பணமாக 360 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய்) செலுத்துமாறு அந்நிறுவனத்தில் இருந்து மின்னனஞ்சல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அதில் குறிப்பிட்டிருந்த ஹாங்காங் நாட்டு வங்கிக் கணக்கில் கடந்த மாதம் 29-ஆம் தேதி பணம் செலுத்தப்பட்டது.

அதேபோல இந்நிறுவனத்தின் விமான சரக்குகளை அமெரிக்காவில் கையாளுவதற்கு என்று அந்நாட்டு நிறுவனம் ஒன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்திலிருந்து கையாளும் கட்டணம் செலுத்துமாறு மின்னனஞ்சல் வந்ததனைத் தொடர்ந்து அந்நிறுவனத்திற்கும் ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய இரு தினங்களில் 24 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்) செலுத்தப்பட்டது.

முதலில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தவறாக எதனையும் கண்டறிய இயலவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் நிலுவைத் தொகையினை உடனே செலுத்துமாறு நினைவூட்டல் கடிதம் வந்த பிறகுதான், தங்கள் ஏமாற்றப்பட்ட விஷயம் தெரிய வந்துள்ளது.

பிறகுதான் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் விபரங்களைத்  திருடி 'சைபர் கிரிமினல்கள்' போலி மின்னஞ்சல்களை அனுப்பி பணத்தை திருடிய விஷயம் தெரிய வந்தது. அதேசமயம் குறிப்பிட்ட வங்கி கணக்கில் போடப்பட்ட தொகை உடனடியாக எடுக்கப்பட்டு விட்டது.   

தற்பொழுது ஹாங்காங் அரசினைத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட வங்கி கணக்கினைப் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →