முகப்பு
உலகம்

கரோனா பேரிடரிலும் அதிகரித்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை

கரோனா பேரிடரின் மத்தியில் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் புதிதாக 412 பேர் இடம்பெற்றுள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
கோப்புப் படம்.
பகிர்:

கரோனா பேரிடரின் மத்தியில் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் புதிதாக 412 பேர் இடம்பெற்றுள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கின. மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு கல்விநிலையங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து என அனைத்து வகையான பொது பயன்பாடுகளுக்கும்  தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. 

பொதுமுடக்கம் காரணமாக வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்தனர். வேலையிழப்பு, உணவுத் தட்டுப்பாடு என மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். அதேசமயம் உலகின் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. 

இந்நிலையில் ஹூரூன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021 வெளியிட்ட அறிக்கையில் கரோனா பேரிடர் மத்தியில் உலக அளவில் புதிதாக 412 பேர் பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி சராசரியாக வாரத்திற்கு 8 பேர் கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் 55 இந்தியர்கள் புதிய பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளனர். வாரத்திற்கு சராசரியாக ஒருவர் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். 

இவர்களில் 40 பேர் இந்தியாவில் வசித்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் மொத்தம் 209 பெரும் பணக்காரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.