சிட்னி துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி - பிரதமர் மோடி கண்டனம்
யூத பண்டிகையான ஹனுக்கா நிகழ்வை குறிவைத்து, குழந்தைகள் விளையாட்டுத் திடலுக்கு அருகே தாக்குதல்...
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்குட்பட்ட சிட்னி நகரில் இன்று (டிச., 12) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
யூத மதப் பண்டிகையான ஹனுக்கா நிகழ்வை குறிவைத்து, குழந்தைகள் விளையாட்டுத் திடலுக்கு அருகிலுள்ள போண்டி கடற்கரை பூங்காவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடற்கரையில் மக்கள் ஆங்காங்கே குழுமியிருந்த நிலையில், பூங்காவில் துப்பாக்கியுடன் நுழைந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் முதலில் 10 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 29 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இருவர் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு காவல் துறையின் கட்டுப்பாட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம். இந்திய மக்களின் சார்பாக, தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்தவர்ளுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | தென்னாப்பிரிக்காவில் கோயில் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி