முகப்பு
உலகம்

புதினுக்கு ஏதோ ஆகிவிட்டது! டிரம்ப் கடும் விமர்சனம்!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியாவின் அதிபரை டிரம்ப் விமர்சித்திருப்பது பற்றி...

Updated On : 26 மே, 2025 at 6:01 AM
டொனால்டு டிரம்ப் (கோப்புப்படம்)
பகிர்:

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்திய ரஷியாவின் அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்ரைன் நாட்டை குறிவைத்து 298 ட்ரோன்கள், 69 ஏவுகணைகள் என மொத்தம் 367 ஆயுதங்கள் மூலம் மிகப்பெரும் வான்வழித் தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை ரஷியா நடத்தியுள்ளது.

இதில், 3 குழந்தைகள் உள்பட மொத்தம் 12 போ் உயிரிழந்ததாகவும் பலர் படுகாயமடைந்ததாகவு உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

டிரம்ப் கண்டனம்

ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”புதினுடன் தனக்கு எப்போதும் நல்ல உறவு உள்ளது. ஆனால், அவருக்கு எதோ ஆகிவிட்டது. அவர் முற்றிலும் முட்டாள்தனமாக செயல்படுகிறார்.

அவர் உக்ரைனின் ஒரு பகுதியை மட்டும் கைப்பற்ற விரும்பவில்லை, முழு உக்ரைனையும் விரும்புவதாக நான் எப்போதும் கூறி வருகிறேன். ஒருவேளை உண்மையென்றால், அது ரஷியாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் கண்டனம்

ரஷியா நடத்திய தாக்குதல் குறித்து எக்ஸ் வலைதளத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘தலைநகா் கீவ் உள்பட 30 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ரஷியா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. மிகவும் சாதாரண நகரங்களில் உள்ள குடியிருப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

ரஷியாவின் தலைமைக்கு கடுமையான அழுத்தம் தந்தால் மட்டுமே இதுபோன்ற கொடூர தாக்குதல்களை நிறுத்த முடியும். அந்நாட்டின் மீது சில தடைகள் விதிப்பது நிச்சயம் பலனளிக்கும். இந்த விவகாரத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும், அமைதியை விரும்பும் பிற நாடுகளும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

1000 கைதிகள் பரிமாற்றம்

ரஷியாவும், உக்ரைனும் தங்களிடம் இருந்த தலா 390 போா்க் கைதிகளை வெள்ளிக்கிழமை விடுவித்தன. அதன் தொடா்ச்சியாக, உக்ரைனில் இருந்து 307 ரஷிய போா்க் கைதிகளும், ரஷியாவில் இருந்து 307 உக்ரைன் போா்க் கைதிகளும் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை 303 ரஷிய போா்க் கைதிகளை உக்ரைனும், 303 உக்ரைன் போா்க் கைதிகளை ரஷியாவும் விடுவித்தன என இரு நாட்டு வெளியுறவுத் துறையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துருக்கியில் கடந்த வாரம் இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments