ஆளத்தொடங்குகிறதா செய்யறிவு? அல்பேனியாவில் முதல் ஏஐ அமைச்சர் டெய்லா யார்?
உலகிலேயே முதல் முறையாக அல்பேனியாவில் முதல் ஏஐ அமைச்சர் டெய்லா பதவியேற்றார்.
உலகிலேயே முதல் முறையாக, அல்பேனியா நாட்டில், செய்யறிவு பெண் அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர், நாட்டில் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கப் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட செய்யறிவு, முதலில், மனிதனின் வேலைகளை அகற்றி, பிறகு மனிதனுக்கு மனிதன் தேவை என்ற நிலையை அகற்றி தற்போது மக்களையே ஆளத் தொடங்கியிருக்கிறது.
அல்பேனியாவில், செய்யறிவால் உருவாக்கப்பட்ட டெய்லா என்ற பெண் அமைச்சர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அரசு அதிகாரிகள், முகாமின் செயல்பாட்டுப் போக்கை விரைவுபடுத்தவும், அதற்கு ஏற்ப மாற்றியமைக்கவும் டீல்லா உதவும்.
Advertisement
நாட்டில் ஊழலை ஒழிக்கும் பணியில் இவர் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமர் எடி ராமா இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர், அல்பேனியா அரசு, தனியாருக்கு விடும் ஒப்பந்தங்கள் அரசு திட்டங்கள் அனைத்தையும் நேரடியாகக் கண்காணிப்பார் என்றும் கூறினார்.
டெய்லா என்ற பெயருக்கு அல்பானியன் மொழியில் சூரியன் என்று பொருள். இந்த அமைச்சர், அமைச்சரவையில் நேரடியாக இடம்பெற்றிருக்க மாட்டாரே தவிர, இவர் செய்யறிவால் உருவாக்கப்பட்டவர், ஊழலை எதிர்த்துப் பணியாற்றுவார் என்றும் ராமா அறிவித்தார்.
இ-அல்பேனிய தளங்களில், குரல் உதவி சேவை கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில், தற்போது, முதல் செய்யறிவு அமைச்சர் பதவியேற்றிருக்கிறார். இவர்தான், அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான இறுதி முடிவை எடுப்பார் என்றும், அனைத்து அரசு ஒப்பந்தங்களையும் தொடர்ந்து டெய்லா கண்காணித்து 100 சதவீதம் ஊழல் இல்லாத ஆட்சியை உறுதி செய்வார் என்றும் கருதப்படுகிறது.
அல்பேனியா பல ஆண்டு காலமாக ஊழலை ஒழிக்கப் போராடி வரும் நிலையில், இந்த புதிய உத்தியை கையிலெடுத்துள்ளது.
இந்த செய்யறிவு அமைச்சரின் முடிவுகளை வேறு யாரேனும் அதிகாரமிக்கவர்கள் கண்காணிப்பார்களா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. அதுபோல, இவ்வாறு ஒரு செய்யறிவு அமைச்சர் இடம்பெறுவது நல்ல முன்முயற்சியாக இருந்தாலும், இதை சரியாகக் கையாளாவிட்டால், பெரிய சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் செய்யறிவுத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.