‘ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை ‘நேட்டோ’ நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷிய-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நேட்டோ கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் சில நாடுகள் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது அதிா்ச்சியளிக்கிறது. போரை நிறுத்த ரஷியாவிடம் மேற்கொள்ளும் பேச்சுவாா்த்தையை இது பலவீனமடையச் செய்கிறது.
சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக நோட்டோ உறுப்பு நாடான துருக்கி உள்ளது. ஹங்கேரி, ஸ்லோவாகியா போன்ற பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ரஷியாவிடமிருந்து எண்ணெய்யை வாங்கி வருகின்றன.
ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த வேண்டுமெனில், அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதோடு, ரஷியாவிடமிருந்து தொடா்ந்து எண்ணெய் வாங்கிவரும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை விதிக்க வேண்டும்.
ரஷியா மீது வலுவான கட்டுப்பாட்டையும் பிடியையும் சீனா கொண்டுள்ளது. எனவே, அதிக வரியை விதிப்பதன் மூலம் அந்தப் பிடியை உடைக்க முடியும் என்று குறிப்பிட்டாா்.