இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய யேமனின் ட்ரோன்கள்! 20 பேர் படுகாயம்!
இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் குறித்து...
இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து எயிலாட் நகரத்தின் மீது இன்று (செப். 25) யேமனில் இருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.
சுற்றுலா நகரமாக அறியப்படும் எயிலாட்டில் உள்ள முக்கிய கட்டடங்களின் மீதான இந்தத் தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Advertisement
ஆனால், அந்த ட்ரோன்களை தகர்க்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் மீது தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கிரீன்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கும் டென்மார்க் பிரதமர்! என்ன காரணம்?