ரஷிய அதிபர் புதினுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி: ஈரான்
ரஷிய அதிபர் புதின் உடனான சந்திப்பு தொடர்பாக ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தது குறித்து...
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி என ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி செவ்வாய்க்கிழமை (ஏப்.28) தெரிவித்துள்ளார்.
கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர் ஒரு நிரந்தர முடிவை எட்டாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்துவரும் நிலையில், இஸ்லாமாபாதில் நடந்த முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அது திட்டமிட்டபடி, முறையாக நடைபெறவில்லை.
இதனிடையே, அண்மையில் பாகிஸ்தான் மற்றும் ஓமனுக்கு மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அதிபர் புதின் உள்பட சில முக்கியத் தலைவர்களை ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை (ஏப்.27) சந்தித்தார்.
Advertisement
இந்தச் சந்திப்பு குறித்து அப்பாஸ் அராக்சி தன்னுடைய எக்ஸ் தளத்தில், “சமீபத்திய நிகழ்வுகள் நமது கூட்டாண்மையின் ஆழத்தையும் வலிமையையும் பறைசாற்றியுள்ளன. நமது உறவு தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், ஒற்றுமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதுடன், ரஷியாவின் ஆதரவையும் வரவேற்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில் அப்பாஸ் அராக்சியிடம், “பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் ஈரானின் நலன்களை ஆதரிக்கவும், மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க உதவவும் ரஷியா தன்னால் இயன்றதைச் செய்யும்” என புதின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.