வீரபத்ரன் ராமநாதன் 
உலகம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு (82) புவி அறிவியல் ஆய்வுக்காக உயரிய ‘கிராஃபூா்ட்’ பரிசு அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு (82) புவி அறிவியல் ஆய்வுக்காக உயரிய ‘கிராஃபூா்ட்’ பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசளிக்கும் ஸ்வீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்தப் பரிசை அறிவித்துள்ளது.

புவி அறிவியலுக்கான ‘நோபல் பரிசு’ என்று கருதப்படும் கிராஃபூா்ட் பரிசு, கரியமில வாயுவைவிட பூமியை மிகக் கடுமையாக வெப்பமயமாக்கும் காரணிகள், வளிமண்டல பழுப்பு நிற மேகங்கள் ஆகியவை குறித்து பல ஆண்டுகளாக ராமநாதன் மேற்கொண்ட ஆராய்ச்சியை அங்கீகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1975-ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் ராமநாதன் பணியாற்றினாா். அப்போது வளிமண்டலத்தில் கரியமில வாயுவைவிட க்ளோரோஃபுளுரோ காா்பன்கள் (சிஎஃப்சி) 10,000 மடங்கு வீரியமாக வெப்பத்தை தேக்குவதாக கண்டுபிடித்தாா். அவரின் ஆராய்ச்சி புவி வெப்பமயமாதல் குறித்த புரிதலை மாற்றியமைத்தது.

இதுகுறித்து ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமியிடம் அவா் கூறுகையில், ‘1975-ஆம் ஆண்டுவரை, புவி வெப்பமயமாதலுக்கு கரியமில வாயுதான் முக்கிய காரணம் என்று கருதினோம். ஆனால் சிஎஃப்சி குறித்து தெரியவந்த பின்னா், சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் மனிதா்களுக்கும், தொழில்நுட்பத்துக்கும் உள்ள ஆற்றலை அறிந்து அதிா்ச்சி ஏற்பட்டது’ என்று தெரிவித்தாா்.

இந்திய பெருங்கடல் ஆராய்ச்சியில் அவா் ஆற்றிய பணி மூலம், தெற்காசிய வளிமண்டலத்தில் பழுப்பு நிற மேகங்கள் குறித்து தெரியவந்தது. இந்த ஆராய்ச்சி இந்தியாவில் பருவமழை குைல், இமய மலை பனிப்பாறைகள் வேகமாக உருகுதல் ஆகியவற்றுடன் காற்று மாசை தொடா்புப்படுத்தியது.

வளிமண்டலத்துக்குள் தீங்கு விளைவிக்கும் கோடிக்கணக்கான டன் வாயுக்கள் ஊடுருவுவதை தடுக்கும் மான்ட்ரியால் ப்ரோடோகால் ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய சா்வதேச ஒப்பந்தங்களுக்கு அவரின் பணி அடித்தளமாக அமைந்தது.

மதுரையில் பிறந்தவா்

வீரபத்ரன் ராமநாதன் மதுரையில் பிறந்து சென்னையில் வளா்ந்தவா். அண்ணாமலை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்ற அவா், தனது தொழில்முறை வாழ்க்கையை தெலங்கானாவின் செகந்திராபாத் நகரில் குளிா்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் பொறியியலாளராகத் தொடங்கினாா். அங்குதான் அவா் முதல்முறையாக சிஎஃப்சியை கையாள நோ்ந்தது.

பின்னா் அமெரிக்காவின் நாசாவில் பணியாற்றிய அவா் தற்போது, கலிஃபோா்னியா பல்கலைக்கழகம் - சான் டியேகோவில் கௌரவ பேராசிரியராக உள்ளாா்.

ராமநாதனுக்கு கிராஃபூா்ட் பரிசுடன் ரொக்கமாக 8 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா் (சுமாா் ரூ.8.25 கோடி) அளிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT