மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது பற்றி...
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்கவும் அதற்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் இந்தியா திங்கள்கிழமை (ஜூன் 8) வலியுறுத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் தீர்வு கிடைக்காததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை வழக்கம் போல் செயல்படாமல் உள்ளதால், சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து, எரிபொருள்கள் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளன.
Advertisement
Advertisement
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
மேற்கு ஆசியாவில் ஈரான், இஸ்ரேல் இடையே மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல்களுக்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது. இந்த நிகழ்வுகள் சர்வதேச நாடுகளுக்கு மிகுந்த கவலையளிக்கின்றன.
இந்தப் போரானது, 100 நாள்களுக்கும் மேலாக நீடித்து, ஏற்கெனவே அளவற்ற துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது உலகளவில் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் அமைதியும், நிலைத்தன்மையும் திரும்பும் வகையில், பதற்றத்தை உடனடியாகத் தணிக்க அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தற்போதைய பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் நாங்கள்(இந்தியா) கேட்டுக்கொள்கிறோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.