அமைச்சரவை விரிவாக்கம், வாரியத் தலைவர் நியமனம் தாமதமாக வாய்ப்பு
அமைச்சரவை விரிவாக்கம், வாரியங்கள் மற்றும் கழகங்களுக்கு தலைவர்களை நியமிப்பது மேலும் தாமதமாகும் வாய்ப்புள்ளது.
அமைச்சரவை விரிவாக்கம், வாரியங்கள் மற்றும் கழகங்களுக்கு தலைவர்களை நியமிப்பது மேலும் தாமதமாகும் வாய்ப்புள்ளது.
முதல்வர் குமாரசாமி தலைமையில் அமைந்துள்ள மஜத-காங்கிரஸ் அமைச்சரவையில் இன்னும் 7 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதில் ஒன்று மஜதவுக்கும், 6 காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டவையாகும். அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இவர்களை சமரசப்படுத்துவதற்கு காலியாக இருக்கும் 6 அமைச்சரவை இடங்கள் தவிர, வாரியங்கள், கழகங்களின் தலைவர் பதவியை நிரப்பவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஆனால், முதல்வர் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டுவதால், அமைச்சரவை விரிவாக்கம், வாரியங்கள், கழகங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யமுடியாமல் காங்கிரஸ் தவித்து வருகிறது.
கட்சிக்கு எதிராக அதிருப்தி வெளிப்படுத்திய காங்கிரஸ் எம்.எல்ஏ.க்களை சந்தித்து சமாதானப்படுத்தியிருந்த அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், வெகுவிரைவில் அமைச்சர் அல்லது வாரியப் பதவிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதை செயல்படுத்தக் கோரி கட்சியில் நெருக்கடி
அதிகரித்துள்ளது.
மொத்தமுள்ள 98 வாரியங்கள், கழகங்களில் மூன்றில் ஒரு இடங்களை மஜதவும், இரண்டில் மூன்று இடங்களை காங்கிரஸும் பகிர்ந்து கொண்டிருந்தன. ஆனால், எந்தெந்த வாரியங்கள், கழகங்களை பகிர்ந்து கொள்வது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது, காங்கிரஸ் கட்சியினரை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. வாரியம், கழகங்களுக்கு யாரை தலைவராக நியமிப்பது என்ற பட்டியலை மஜத தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்பது அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.
இதனிடையே, மங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை சந்தித்த முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சரவை விரிவாக்கம், வாரியங்கள், கழகங்களுக்கு தலைவர்களை நியமிப்பது குறித்து விவாதிப்பதாக கூறப்படுகிறது.
ஆனாலும், ஜூலை 5-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஜூன் 12-ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம்
நடைபெறுகிறது.
முதல்வர் குமாரசாமி ஆர்வம் காட்டாத நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் முடியும் வரை அமைச்சரவை விரிவாக்கம் அல்லது வாரியத் தலைவர் பதவி நியமனம் ஆகியவற்றில் சாத்தியமில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.