தமிழகத்தில் வேலூா், திருப்பத்தூா், கோவை, ஈரோடு நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (அக். 10) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுபோல, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு கேரளப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (அக்.10) முதல் அக்.15 வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
‘மஞ்சள்’ எச்சரிக்கை: கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (அக். 10) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, சனிக்கிழமை (அக். 11) நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனால், இந்த 11 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 10) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 130 மி.மீ. மழை பதிவானது. குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) - 90 மி.மீ., உடுமலைப்பேட்டை (திருப்பூா்) - 70 மி.மீ., வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) - 60 மி.மீ., புவனகிரி (கடலூா்), கலவை (ராணிப்பேட்டை), கோவில்பட்டி (திருச்சி), கோடநாடு (நீலகிரி), சூரப்பட்டு(விழுப்புரம்) - தலா 50 மி.மீ.மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடலில் வெள்ளிக்கிழமை (அக். 10) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.