சுதந்திர தினவிழா ஒத்திகை: ராஜாஜி சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி, ராஜாஜி சாலையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை (ஆக. 13) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி, ராஜாஜி சாலையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை (ஆக. 13) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா, சென்னை தலைமைச் செயலகத்தில் வழக்கம்போல கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமையும் (ஆக.10), சனிக்கிழமை (ஆக. 11) மற்றும் திங்கள்கிழமை (ஆக. 13 )சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒத்திகை நிகழ்ச்சியால், அந்த 3 நாள்களிலும் காலை 6.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை ராஜாஜி சாலையிலும், காமராஜர் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த நேரத்தில் உழைப்பாளர் சிலையில் இருந்து போர் நினைவுச்சின்னம் வரை காமராஜர் சாலையிலும், போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வடக்குப் பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலையிலும், கொடி மரச்சாலையிலும் போக்குவரத்துத் தடை செய்யப்படும்.
காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
அதேபோல் பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச் சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.