சென்னை மாநகராட்சி: லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷெனாய் நகர் பகுதியில் தனது வீட்டின் முன்புறம் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து தனியார் ஒருவர் வைத்துள்ள ஜெனரேட்டரை அகற்றக் கோரி லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என வேதனை தெரிவித்திருந்தது.
அனைவரையும் இடமாற்ற...இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ""சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகி விட்டது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை போலீஸார் முறையாக மேற்கொள்வதில்லை. இதனால் அவர்கள் லஞ்சம் கொடுப்பவர்களுடன் சேர்ந்து செயல்படுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் சென்னை மாநகராட்சியில் லஞ்சம் பெருகி வருகிறது.
4 வாரத்துக்குள்...சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் 4 வார காலத்துக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும். அந்தப் பணியில் நியமிக்கப்படும் புதிய நபர்கள் குறித்து தமிழக காவல் துறை டிஜிபியுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் கலந்தாலோசித்து டி.எஸ்.பி. பதவிக்கு குறையாத நேர்மையான அதிகாரியின் கீழ் புதிய நபர்களைக் கொண்டு ஊழல் கண்காணிப்புப் பிரிவை நியமிக்க வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் 4 வார காலத்துக்குள் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும்.
தனி மையம் அமைக்க வேண்டும்: மேலும், சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு தனியாக மையம் ஒன்றை அமைக்க வேண்டும். இந்த மையத்துக்கு வரும் புகார்களை மாநகராட்சி ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும். லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் தவறு என்பதை விளக்கும் வகையில் விளம்பரப் பலகைகள் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: புதிதாக அமைக்கப்படவுள்ள மையத்தில் பணியாற்றும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனைகள் மேற்கொண்டு, தவறு செய்யும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி ஆணையரை யாரும் கட்டுப்படுத்துகின்றனரா என்பது தெரியவில்லை.
அதிகாரிகளே பொறுப்பு: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் இளநிலைப் பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் செயற் பொறியாளர் என யாரும் அவர்களது கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை. இந்த அனைத்துத் தவறுகளுக்குமான பொறுப்பை அதிகாரிகளே ஏற்க வேண்டும்.
12 வாரத்துக்குள்...சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை 12 வார காலத்துக்குள் மாநகராட்சி ஆணையர் பெற வேண்டும். இந்த விவரங்களைப் பெறுவதில் ஏதேனும் இடையூறுகள் இருந்தால் அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற லஞ்ச லாவண்யத்தால், சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் புற்றீசல் போல் பெருகி விதிமீறல்களின் மொத்த உருவாக மாறி உள்ளது.
எனவே, சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக 12 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.