திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு கத்திக்குத்து: காதலன் தற்கொலை முயற்சி
திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவொற்றியூர் சாத்துமாநகர் காந்திநகர் பிரதான தெருவைச் சேர்ந்தவர் வே. பாரதி (24). ஆசிரியை பயிற்சியை முடித்திருக்கும் இவர், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள இருசக்கர விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறார். பாரதியும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாலாஜியும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் செய்வதில் இரு குடும்பங்களிடையே முதலில் எதிர்ப்பு ஏற்பட்டதாம். பின்னர், இரு குடும்பத்தினரும் சமாதானம் அடைந்திருக்கின்றனர். இதற்கிடையே, பாலாஜி மதுஅருந்திவிட்டு வந்து, பாரதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதனால் பாரதி, பாலாஜியை திருமணம் செய்யும் முடிவை கைவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாரதியின் வீட்டுக்கு வந்த பாலாஜி இது குறித்து பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே பாலாஜி, அங்கு கிடந்த ஒரு கத்தியை எடுத்து பாரதியை குத்தினாராம்.
பின்னர், அங்கிருந்து பாலாஜி தப்பிச் சென்றுள்ளார். இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாரதியை அங்குள்ளவர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தப்பிச் சென்ற பாலாஜி, மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு சிறிது நேரத்தில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதைப் பார்த்த போலீஸார், பாலாஜியை உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.