சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை
சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ரீட்டா (49) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ரீட்டா (49) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கோயம்பேட்டில் உள்ள லேன்சன் டொயோட்டா கார் ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் லங்கா லிங்கம். இவரது மனைவி ரீட்டா லங்கா லிங்கம் (49) அதே நிறுவனத்தில் இணை இயக்குநராக இருந்தார். இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். இதில் மகள் லாவண்யா சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் திருமணமாகி சென்னையில் தொழிலை கவனித்து வருகிறார்.
ரீட்டா மற்றும் அவரது கணவர் லங்கா லிங்கம் சென்னை நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தனர். இவர்களின் வீட்டின் மேற்பார்வையாளராக ஏசுபாதம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் ரீட்டாவின் வீட்டுக்கு வந்தபோது ரீட்டாவின் அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.
இதையடுத்து அறையின் உள்ளே பார்த்தபோது ரீட்டா மின்விசிறியில் தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஏசுபாதம், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கார் விற்பனை குறைவு, தொழிலில் ஏற்பட்ட நலிவு காரணமாக ரீட்டா தனது அலுவலகத்தில் உள்ள அனைத்து மேலாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதை கணவர் தட்டிக் கேட்டதால் தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதனால் ரீட்டாவின் கணவர் லங்கா லிங்கம் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார். மனமுடைந்த ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.