மக்கள்தொகை கணக்கெடுப்பு! தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? இயக்குநரகம் முழு விளக்கம்!
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின் விவரங்கள் மூலமாக பெறப்படும் தகவல்கள் நேரடியாக திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாது, மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.
மக்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படாது, மக்களின் குடியுரிமை, வாக்குரிமை போன்றவற்றில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாது; இது வெறும் கணக்கெடுப்பு மட்டுமே என்றும் இயக்குநர் சுந்தரேஷ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், மோசடிகளைத் தடுக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான அடையாள அட்டை இல்லாமல் வரும் நபர்களிடம் விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.
Advertisement
Advertisement
மக்கள் ஆன்லைன் மூலமாக சுய விவரங்களை பதிவு செய்த பின்னர் பெறப்படும் பதிவெண்களை கணக்கெடுப்பு அலுவலரிடம் காண்பித்து உறுதி செய்தால் மட்டுமே கணக்கீடு எடுத்துக்கொள்ளப்படும்.
தமிழ்நாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் எம்.சுந்தரேஷ் அவர்கள் தலைமையில் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2027 தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் சுந்தரேஷ், தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து, 60 ஆயிரம் நபர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முதல் கட்டமாக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்தும், 2 ஆம் கட்டமாக மக்கள் தொகை எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும்.
முதன்முறையாக முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணக்கெடுப்பு நடைபெறுகிறது. மக்கள் நேரடியாக சுய கணக்கெடுப்பு விவரப்பதிவும் முதன்முறை என்பது குறிப்பிடதக்கது.
முதற்கட்ட களப்பணி ஆகஸ்ட் - 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கவுள்ளனர்.
பொதுமக்கள் முழுமையான சரியான தகவல்களை வழங்க வேண்டும், இவை நாட்டின் வளர்ச்சி திட்டமிடலுக்கு உறுதியானதாக இருக்க முடியும்.
மக்கள் அச்சமடையத் தேவையில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுவான தகவலை மட்டும்தான் சேகரிக்கிறோம்; இந்த தகவலை வைத்து நேரடியாக திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படாது. மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க மாட்டோம் எனவும், வீடுகள் இல்லாதவர்கள் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் அவர்களது விவரங்கள் மட்டும் பதியப்படும்.
ஒவ்வொரு கணக்கெடுப்பு பணியாளரும் நாளொன்றுக்கு 200 முதல் 250 வீடுகளுக்கு நேரடியாக செல்வார்கள்; 900 மக்களை கணக்கீடு எடுப்பார்கள்.
சுய கணக்கெடுப்பு எடுத்த பின்னர் அதில் வரும் பதிவு எண்களை வீடுகளுக்கு நேரடியாக வரும் கணக்கெடுப்பு பணியாளரிடம் காண்பித்து அதனை உறுதி செய்த பின்னரே கணக்கெடுப்பு எடுத்துக்கொள்ளப்படும்.
கணக்கெடுப்பு எடுத்து முடித்த பின்னர் தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படாது. பொதுவான எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்கள் மட்டுமே வெளியிடப்படும்.
சிஏஏ விவரங்கள் சேகரிப்பு போன்ற எந்தவித அச்சமும் வேண்டாம். மேலும் மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கப்படாது, மக்களின் குடியுரிமை, வாக்குரிமை போன்றவற்றில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாது; இது வெறும் கணக்கெடுப்பு மட்டுமே என்றார்.
வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் அந்தந்த இடங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான விவரங்களை தெரிவிக்கலாம். வீடுகளை எளிதில் கணக்கெடுப்பாளர்கள் அடையாளம் காண தெளிவான எச்டி தரத்திலான வரைபடம் மூலமாக வீடுகளை கண்டறியலாம்.
கணக்கெடுப்பிற்கு 30 நாட்கள் காலம் உள்ளது. வீடுகள் பூட்டப்பட்டிருந்தால் அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் மூலமாக தகவல் அளிக்கலாம், 3 முறை வரை அவர்களை தொடர்புகொள்ளலாம் என்றார்.
கணக்கெடுப்பு பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் அடையாள அட்டை (ஐடி கார்டு) அணிந்துதான் கணக்கெடுப்பு பணிக்கு செல்வார்கள்.
கணக்கெடுப்பு என்ற பெயரில் மோசடிகள் நடப்பதைத் தடுக்க கணக்கெடுப்பு பணியாளர்கள் அவர்களுக்கான அடையாள அட்டை இல்லாமலோ வேறு நபர்கள் கணக்கெடுப்பு பணிக்கு வந்தாலோ அனுமதிக்க வேண்டாம் என்றார்.
6 கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டு பணிகளை கண்காணிப்பாளர்கள் என்றும் சுந்தரேஷ் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.