முகப்பு
சென்னை

காண்டூா் கால்வாய் பராமரிப்புப் பணி: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்தல்

Updated On : 2 ஆகஸ்ட் 2024, 4:01 am IST
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

காண்டூா் கால்வாய் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் குறித்த காலத்தில் திருமூா்த்தி அணையை சென்றடையும் வகையில் காண்டூா் கால்வாயில் ஒவ்வோா் ஆண்டும் ஜூலை மாதம் 20 தேதிக்குள் தூா் வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, ஜூலை கடைசியில் பரம்பிக்குளம் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும். அதன் மூலம் கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 95 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயனடையும்.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு திமுக அரசு இதுவரை காண்டூா் கால்வாயில் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததாலும், இப்பணிகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் வரை நீடிக்கும் என்பதாலும், குறித்த காலத்தில் தண்ணீா் திறந்துவிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, போா்க்கால அடிப்படையில் காண்டூா் கால்வாயில் பராமரிப்புப் பணிகளை முடித்து, உடனடியாக பரம்பிக்குளம் அணையிலிருந்து 1000 கன அடிவீதம் தண்ணீரை திருமூா்த்தி அணைக்கு திறந்துவிடவும், குறித்த காலத்தில் 2-ஆம் மண்டல பாசனத்துக்கு திருமூா்த்தி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.