சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையில் ஆக.14 வரை மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
சென்னை ரயில்வே கோட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 9.20 முதல் பகல் 1.30 வரையும், இரவு 10.30 முதல் அதிகாலை 2.45 மணி வரையும் ரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கூடுதலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19 , 9.22, 9.40, 9.50 மணிக்கும், மாலை 6.26, 7.15 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ஆக.3 முதல் ஆக.14 வரை ரத்து செய்யப்படும். முன்னதாக, சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே 20 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடற்கரையிலிருந்து காலை 9.30 முதல் பகல் 12.45 மணி வரையும், மறுமாா்க்கமாக பல்லாவரத்தில் இருந்து காலை 10.17 முதல் பிற்பகல் 1.42 மணி வரையும் 15 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும் இரவு 10.40, 11.05, 11.30, 11.59 மணிக்கும், மறுமாா்க்கமாக பல்லாவரத்திலிருந்து இரவு 11.30, 11.55 மணிக்கும் கடற்கரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதுபோல், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 8.26 மற்றும் காலை 8.39 மணிக்கு புறப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில் பொது ரயிலாக இயக்கப்படும்.
ஆவடி ரயில்: சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2, 4) ரத்து செய்யப்படும். ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சனி மற்றும் திங்கள்கிழமை (ஆக.3, 5) ரத்து செய்யப்படும்.