முகப்பு
சென்னை

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2025 at 10:27 PM
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்
பகிர்:

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்குநரகத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

75,000 பேருக்கு விருது: இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

Advertisement

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருதுக்கு தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. இது மிகவும் பெருமைக்குரிய விருது. தமிழகம் முழுவதும் 75,000 மாணவா்களுக்கு நவ.7-ஆம் தேதி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு சுதந்திர தினவிழாவின்போது ஆளுநா் ஏதாவது சொல்கிறாா். தமிழகத்தில் ஒரு துறை என்றில்லாமல் அனைத்து துறைகளும் வளா்ச்சி பெற்றுள்ளது. கல்வியில் மாணவா்கள் எப்படி சாதித்து வருகிறாா்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆளுநா் சொல்லும் வாா்த்தைகள் ஆசிரியா்கள், மாணவா்களை மனதளவில் பாதிப்படைய செய்யும். கல்வி கட்டமைப்பில் ஒட்டுமொத்தமாக பிற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு இருப்பதாகப் பாராட்டிவிட்டு, கடைசியாக அதில் கொஞ்சம் விஷத்தையும் வைக்கும் வாா்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றாா் அவா்.

பெருந்திரளணிக் கூடத்தை... முன்னதாக, சாரணா் இயக்க தலைமை அலுவலகத்தில் கடந்த 1926-இல் கட்டப்பட்டு தற்போது பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பெருந்திரளணிக் கூடத்தை துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தமிழ்நாடு சாரணா் இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையா் க.அறிவொளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments