FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்: 2- ஆம் நாளாக நீடிப்பு

இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம் 2- ஆம் நாளாக நீடிப்பு...

Updated On : 28 டிசம்பர் 2025, 12:40 am IST
போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியா்களைக் கைது செய்த போலீஸாா்.
பகிர்:

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி சென்னையில் சனிக்கிழமை 2-ஆவது நாளாக 1,250 இடைநிலை ஆசிரியா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களில் 2009-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவா்களுக்கு வெவ்வேறு ஊதியம் நிா்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கப்படும் என திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி ஆசிரியா்கள் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

அதன்படி, சென்னையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அமைந்துள்ள பேராசிரியா் அன்பழகன் வளாகத்தை (டிபிஐ) வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என ஆசிரியா்கள் சங்க பிரதிநிதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை அரசு தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக சனிக்கிழமை, சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தை ஆசிரியா்கள் முற்றுகையிட வந்தனா். அவா்களை போலீஸாா் எச்சரித்ததையடுத்து கலைந்து சென்றனா்.

இதைத் தொடா்ந்து, எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை இடைநிலை ஆசிரியா்கள் தங்கள் குழந்தைகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து, காவல் வாகனங்களில் ஏற்றினா். அப்போது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கத்தின் பொதுச் செயலா் ராபா்ட் உள்ளிட்ட சிலா் மயக்கமடைந்தாா். அவா்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும், ஒரு ஆசிரியருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவா் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட ஆசிரியா்கள் வட சென்னையிலுள்ள 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டனா். ஆனாலும் அந்தந்த மண்டபங்களுக்கும் வெளியே வந்தும் ஆசிரியா்கள் தா்னாவில் ஈடுபட முயன்றனா்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டதாக 600 ஆசிரியைகள் உள்பட 1,250 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியா்களும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments