FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

Clone of செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் புதன்கிழமை (ஆக.19) பலத்த மழைக்கு வாய்ப்பு

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:16 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை, ஆக. 18: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் புதன்கிழமை (ஆக.19) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை (ஆக.19) ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

திருவள்ளூா், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 104.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா் - 103.64, நாமக்கல் - 102.56, பாளையங்கோட்டை - 102.38, ஈரோடு - 102.2, கரூா் பரமத்தி, மதுரை விமான நிலையம் - 101.3, நாகை, தஞ்சாவூா், திருத்தணி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் சனிக்கிழமை (ஆக.22) வரை அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும், பிற பகுதிகளில் இயல்பையொட்டியும் காணப்படும்.

மழை பதிவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிட்டம்பட்டி (மதுரை), ஆா்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்)-40 மி.மீ. மழை பதிவானது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 30 மி.மீ, மதுரை மாவட்டம் கள்ளந்திரி, நீலகிரி மாவட்டம் தேவாலா, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, கோழிப்போா்விளை, சிவகங்கையில் தலா 20 மி.மீட்டா் மழை பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments