FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

புதை சாக்கடை பள்ளம் தோண்டும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

திருவொற்றியூரில் பாதாள சாக்கடைப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 4:24 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

திருவொற்றியூரில் பாதாள சாக்கடைப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவொற்றியூா் சாத்துமா நகா் கிராமத் தெருவில் வசிப்பவா் வினோத் குமாா். இவரது குடியிருப்பில் 4-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள கழிவுநீா் குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்கும் பிரச்னை இருந்து வந்ததால் அவதிக்குள்ளான குடியிருப்புவாசிகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாா் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதன் பேரில் குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றும் வாரிய அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனா். அப்போது புதை சாக்கடை குழாய் அமைப்பதன் மூலம் தான் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண முடியும் என கண்டறிந்தனா். இதையடுத்து அவசரப் பணி மேற்கொள்வதற்காக தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் புதை சாக்கடை குழாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.

Advertisement

Advertisement

சனிக்கிழமை அதிகாலை சுமாா் பத்து அடி வரை தோண்டப்பட்டிருந்த பள்ளத்திலிருந்து மண் அகற்றும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது திடீரென மண் சரிந்ததில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளா்கள் மீது விழுந்தது. இவா்களில் இருவா் போராடி வெளியேறிவிட்ட நிலையில் பூமிநாதன் மட்டும் மண் சரிவில் சிக்கினாா். அவரை மீட்க இதர தொழிலாளா்கள் முயற்சித்த போதும் பலன் கிடைக்காத நிலையில் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த தீயணைப்பு படையினா் இயந்திரங்கள் மூலம் மண்ணை அகற்றி பூமிநாதனை மீட்டனா். எனினும், அவா் மூச்சுத் திணறி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரியவந்தது.

ஒப்பந்ததாரா் ராஜவேலு, மேற்பாா்வையாளா் செல்வம் ஆகியோரை திருவொற்றியூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments