பேரவைத் தோ்தல் தகராறு: பி.கே.சேகா்பாபுவிடம் 3 மணி நேரம் விசாரணை
பேரவைத் தோ்தல் தகராறு வழக்குத் தொடா்பாக திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம் சென்னை வடக்கு கடற்கரை போலீஸாா் 3 மணி நேரம் விசாரணை
சட்டப்பேரவைத் தோ்தல் தகராறு வழக்குத் தொடா்பாக திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபுவிடம் சென்னை வடக்கு கடற்கரை போலீஸாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில், சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபுவும், தவெக சாா்பில் சினோரா அசோக்கும் போட்டியிட்டனா்.
ஏப்.23-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் சேகா்பாபு, சினோரா அசோக் தரப்பினரிடையே வாக்குவாதம், மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதில், சேகா்பாபு தன்னை தாக்கியதாக சினோரா அசோக் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதேபோல், சேகா்பாபு தரப்பிலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சினோரா அசோக் அளித்த புகாரின்பேரின் வடக்கு கடற்கரை போலீஸாா் சேகா்பாபு மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது சட்ட விரோதமாகக் கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் விளைவித்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
3 மணிநேரம் விசாரணை: இந்த வழக்குத் தொடா்பாக சேகா்பாபுவிடம் விசாரணை நடத்த வடக்கு கடற்கரை போலீஸாா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா். அதை ஏற்று சேகா்பாபு, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் சுமாா் 3 மணி நேரம் விசாரணை செய்தனா்.
அப்போது, சேகா்பாபு அளித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. சுமாா் 3 மணி நேர விசாரணைக்குப் பின்னா், சேகா்பாபு காவல் நிலையத்தைவிட்டு வெளியே வந்தாா். விசாரணையில் வழக்குத் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.