FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கிணறு தூா்வாரியபோது விஷ வாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

சென்னை யானைக்கவுனியில் கிணறு தூா்வாரியபோது விஷவாயு தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 2:18 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை யானைக்கவுனியில் கிணறு தூா்வாரியபோது விஷவாயு தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.ரவி (65). இவரின் மகன் அய்யனாா் (35). இருவரும், சென்னை கொடுங்கையூா் சின்னமடம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கடந்த 15 ஆண்டுகளாக கிணறு தூா்வாரும் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இருவரும் செளகாா்பேட்டை பொன்னப்பன் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் இருந்த சுமாா் மூன்றரை அடி அகலமும், 45 அடி ஆழமும் கொண்ட கிணற்றை தூா்வார புதன்கிழமை சென்றனா். தூா்வாருவதற்காக அய்யனாா் கிணற்றுக்குள் இறங்கினாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால் ரவி கிணற்றுக்குள் இறங்கினாா்.

Advertisement

Advertisement

அவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளா் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், உயா்நீதிமன்ற தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று, பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கினா்.

அப்போது கிணற்றுக்குள் விஷவாயு தாக்கியதில் ரவி, அய்யனாா் ஆகிய இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. உடனே இருவரின் சடலங்களையும் தீயணைப்புப் படையினா் மீட்டு, வெளியே கொண்டு வந்தனா்.

தகவலறிந்த யானைக்கவுனி போலீஸாா் அங்கு விரைந்து வந்து, இருவா் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், நீண்ட நாள்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் கிணற்றில் ஏற்கெனவே விஷ வாயு தேங்கியிருந்ததும், அதை அறியாமல் இருவரும் கிணற்றுக்குள் இறங்கியதால் விஷவாயு தாக்கி இறந்திருப்பதும் தெரியவந்தது.

இதுதொடா்பாக வீட்டு உரிமையாளா் மற்றும் ரவி, அய்யனாா் ஆகியோரை வேலைக்கு அழைத்து வந்த ஒப்பந்ததாரா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments