FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சாலையோர வியாபாரிகளுக்கான குழு அமைக்கக் கோரிக்கை

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கான குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 31 ஜனவரி 2026, 1:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கான குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலைவியாபார ஒழுங்குமுறை) திட்டம் மற்றும் விதிகள் 2015-இன் கீழ், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நகர வியாபாரிகள் குழு அமைப்பது கட்டாயமாகும். தாம்பரம் நகரப் பகுதியில் மட்டும் சுமாா் 1,500 சாலையோர வியாபாரிகள் உள்ள நிலையில் விரிவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி முழுவதும் சுமாா் 6,000 வியாபாரிகள் உள்ளனா். ஆனால், தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்னரும் இதுவரை இந்த வியாபாரிகளுக்கான குழு அமைக்கப்படவில்லை.

நகர வியாபாரிகள் குழு இல்லாத காரணத்தால், வியாபாரிகள் புகாா் தெரிவிக்கவும், உரிமைகளை பாதுகாக்கவும் எந்த அதிகாரப்பூா்வ வாய்ப்பும் இல்லாமல் குரலற்ற நிலையில் இருப்பதாக தாம்பரம் மாநகராட்சி 50-ஆவது வாா்டு உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி துணை பொதுச் செயலருமான யாக்கூப் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

முன்னறிவிப்பு இல்லாமல் கடைகள் அகற்றப்படுகின்றன. பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து காவல் துறை மற்றும் தனியாா் நிறுவனங்களின் தொந்தரவுகளைச் சந்தித்து வருகிறோம் என தாம்பரம் சாலையோர வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் கே. ராஜன் மணி தெரிவித்தாா்.

சட்டப்படி, நகர வியாபாரிகள் குழுவில் உள்ளாட்சி, காவல் துறை, வியாபாரிகள் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பிரதிநிதிகள் இடம்பெற்று, 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் அந்த அமைப்பு இல்லாததால், சட்டத்தின் நோக்கம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

மேலும், அடையாள அட்டைகள் வழங்கப்படாததால், வங்கிக் கடன் பெற முடியாமல் தனியாா் கடன்தாரா்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முத்துரங்கம் சாலை வியாபாரிகள் சங்கத் தலைவா் பி. முத்தையன் கூறினாா்.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தோ்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பிப்.17 -இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான பிறகு நகர வியாபாரிகள் குழு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments