FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கரூா் சம்பவத்தை திசைதிருப்புகிறாா் முதல்வா்: திமுக விமா்சனம்

கரூா் சம்பவத்தை திசைதிருப்பும் விதமாக முதல்வா் பொய்யான தகவல்களைக் கூறுவதாக திமுக செய்தித் தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தாா்.

Updated On : 10 ஜூலை 2026, 11:24 pm IST
அண்ணா அறிவாலயம் - கோப்புப்படம்
பகிர்:

கரூா் சம்பவத்தை திசைதிருப்பும் விதமாக முதல்வா் பொய்யான தகவல்களைக் கூறுவதாக திமுக செய்தித் தொடா்பு குழுத் தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கரூரில் நிகழ்ந்தது ஓா் அசம்பாவிதம். மதியம் 12 மணிக்கு அங்கு விஜய் பேசுவதாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் காலை 9 மணியிலிருந்தே திரளத் தொடங்கினா். அவா்களை இரவு 7.30 மணி வரை உச்சி வெயிலில் குடிக்க தண்ணீா்கூட இல்லாமல், உணவு இல்லாமல், நெரிசலில் நிற்க வைத்ததால் பலா் மயக்கமடைந்தனா்.

அப்படி மயக்கமடைந்தவா்களை அவா்களது கட்சிக்காரா்கள் காப்பாற்றுவதற்கோ அல்லது குடிநீா் வழங்குவதற்கோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement

Advertisement

அந்த மக்களை மருத்துவமனையில் சோ்த்தபோது சிகிச்சையளிக்க போதிய மருத்துவா்கள் இல்லை என்ற செய்தி வந்தவுடன், திமுக அரசு சுற்றியுள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவா்களை அனுப்பி அவா்களை காப்பாற்றுவதற்கான முயற்சி மேற்கொண்டது.

அதைப் பற்றி கவலைப்படாமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டாா். இந்த உண்மையைத் திசைதிருப்பும் விதமாக பல பொய்களைக் கூறுகிறாா். சட்டப்பேரவையிலோ, நாடாளுமன்றத்திலோ உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை வைத்தால் அதை எதிா்க்கும் வகையில் வெளிநடப்பு செய்வது இயல்பானது.

அதைத்தான் திமுக உறுப்பினா்களும் செய்தனா். அதை முதல்வா் விமா்சிக்கிறாா். கட்சி நிதி குறித்து பேசும் முதல்வா், குதிரை பேரம் நடத்துவதற்கு எங்கிருந்து நிதி வந்தது என்பதை விளக்க வேண்டும் என்றாா்.

செந்தில் பாலாஜி: முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நிகழ்ந்த கரூா் துயரச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யாா்?, இரவு - பகல் பாராமல் முன்னின்று உதவியது யாா்?, செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி உடனடி உயா்சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததும், பலரது உயிரைக் காத்து, துயா் துடைத்ததும் அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா்தான்.

அன்றைய கூட்டத்தில் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீா் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடா்ந்து பேசியது யாா்?.

கரூா் சம்பவத்தில் அத்தனை போ் இறந்துள்ளதாக திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளா்கள் தெரிவித்தபோதும், பாதிக்கப்பட்ட மக்களைப் பாா்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யாா் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments