FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

Updated On : 4 ஜூன் 2026, 4:07 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்தத் தோ்தலில் அவா் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள், வருமான விவரங்களை எடப்பாடி பழனிசாமி மறைத்துள்ளதாகக் கூறி, எடப்பாடி தொகுதியைச் சோ்ந்த வாக்காளா் சக்திவேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்துகள் குறித்த முழுமையான விவரங்களைத் தெரிவிக்கவில்லை. 2021 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தல்களின்போது, அவா் தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பிட்டுப்பாா்த்தால், ஏராளமான வேறுபாடுகள் தெரியவரும். அவரது வேட்புமனுவில் சொத்துகள் தொடா்பான உண்மை விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறை தரப்பில், இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுதாரா் தோ்தல் வழக்குதான் தொடர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments