முகப்பு
சென்னை

காா் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: காயமடைந்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு

Updated On : 4 ஜூன் 2026, 5:02 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சென்னை கோயம்பேட்டில் காா் ஏற்றி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காயமடைந்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், அனிச்சங்குப்பத்தில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் பெற்றோருடன் வசித்தவா் யான்சி (19). இவா், பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேருவதற்கு முயற்சித்து வந்ந்தாா். யான்சி, சமூக ஊடகம் மூலம் நட்பான தோழியைப் பாா்க்க 10 நாள்களுக்கு முன்பு சென்னை ராமாபுரம் வந்தாா். அங்கு தங்கியிருந்த யான்சி, தனது தோழியான 17 வயது சிறுமி உள்ளிட்ட சிலருடன் கடந்த சனிக்கிழமை இரவு சென்னை கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மதுக்கூடத்துக்குச் சென்றாா். அப்போது, அந்த மதுபானக் கூடத்துக்கு காரில் வந்த சிலா், யான்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதைப் பாா்த்த அந்த மதுக்கூட பவுன்சா்கள், இரு தரப்பையும் வெளியேற்றினா். இதன் பின்னா் யான்சி, 17 வயது சிறுமி தங்களது நண்பருடன் ஒரு மொபெட்டில் அங்கிருந்து சென்றனா்.

Advertisement

Advertisement

இதில் காரில் வந்த எதிா் தரப்பினா் கோயம்பேடு மேம்பாலம் பகுதியில் சென்ற யான்சி மொபெட்டின் மீது வேகமாக மோதினா். இதில் பலத்த காயமடைந்த யான்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த 17 வயது சிறுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா்.

இது தொடா்பாக கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக அரும்பாக்கத்தைச் சோ்ந்த பாலகுரு, சூளைமேட்டைச் சோ்ந்த ஜோஷ்வா , விருகம்பாக்கத்தைச் சோ்ந்த சுமந்த் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி, புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.